

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள் நேற்று ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான தூதரக உறவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த 17-ம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டன. இதற்குப் பதிலடியாக தலைநகர் டெல்லி சாணக்கியபுரியில் உள்ள பாகிஸ்தான் தூதரக வளாகத்தின் பாதுகாப்பு தடுப்புகள் நேற்று ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
பாகிஸ்தான் தூதரக வளாகத்தின் விசா வழங்கும் பகுதியில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அவை முழுமையாக இடித்து அகற்றப்பட்டு உள்ளன.
மேலும் தூதரக வளாகத்தின் முன்பாக இரும்பு கதவுகள், இரும்பு தடுப்புகள், இரும்பிலான மேற்கூரைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் ஜேபிசி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டன.
தூதரகத்தின் முன்பாக செங்கற்கள், கான்கிரீட் கலவையால் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு இருந்தது. அந்த தடுப்புச் சுவரும் இடித்து தள்ளப்பட்டிருக்கிறது. இதுகுறித்து டெல்லி அரசு வட்டாரங்கள் கூறும்போது, “பாகிஸ்தான் தூதரக வளாக சாலையில் ஆக்கிரமிப்புகள் மட்டும் அகற்றப்பட்டு உள்ளன” என்று தெரிவித்தன.
இதுதொடர்பாக அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்து உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்வதேச அமைப்புகளிடம் பாகிஸ்தான் முறையிட்டு வருகிறது. ஆனால் அந்த நாட்டுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அந்த நாடுகள் தற்போது இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கி உள்ளன. இவை உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தான் அரசு கடும் விரக்தியில் உள்ளது.
இதன் எதிர்விளைவாக பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அந்த நாட்டு அரசு மறைமுகமாக நெருக்கடி அளித்து வருகிறது. அண்மையில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள் அகற்றப்பட்டன.
மேலும் இந்திய தூதரக அலுவலர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று வியாபாரிகளுக்கு பாகிஸ்தான் அரசு நெருக்கடி அளித்து வருகிறது. தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவதற்காக டெல்லியில் உள்ள அந்த நாட்டு தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.