

லக்கிம்பூர் கேரி: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் 8ம் வகுப்பு படிக்கும் சிறுவன் அமிதாப் குப்தா, ‘சம்பூர்ண சமா தான் திவஸ்’ (முழு குறைதீர்க்கும் நாள்) முகாமுக்குத் தனியாக வந்திருந்தான்.
அவனை பார்த்த மாவட்ட ஆட்சியர் அஞ்சனி குமார் சிங், “தனியாகவா வந்திருக்கிறாய் ?” என்று கேட்க, அதற்கு அவன், “என் தந்தை மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்; என்தாய் பிறர் வீடுகளில் வேலை செய்து எங்களைக் காப்பாற்றி வருகிறார்” என்று மிகவும் துணிச்சலுடன் பதிலளித்தான்.
மேலும், தங்களது கூட்டுக் குடும்ப வீட்டிற்கு உறவினர்கள் சிலர் சட்டவிரோதமாகப் பூட்டுப் போட்டுள்ளனர், அதை அகற்றக்கோரி பலமுறை புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை என்றும், பூட்டப்பட்டுக் கிடக்கும் வீட்டின் பகுதியை வாடகைக்கு விட்டால் அதில் வரும் பணத்தைக் கொண்டு நானும், என் சகோதரியும் படிக்க முடியும் என்றும் விளக்கினான்.
அப்போது, அங்கிருந்த காவல் ஆய்வாளர் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தபோது, அமிதாப் சட்டென்று, “செய்கிறோம் என்று சொல்லாதீர்கள், உடனே செய்து காட்டுங்கள்” என ஆணித்தரமாகக் கூறினான்.
அதற்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சனி குமார், அதிகாரிகள் முன்னிலையில் தவறான வார்த்தைகளைப் பேசக் கூடாது எனச் சிறுவனை எச்சரித்ததோடு, தற்போதைக்கு அவனது முழுக்கவனம் படிப்பில்தான் இருக்க வேண்டும், கோரிக்கை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், இந்தச் சொத்துப் பிரச்சினை தொடர்பாக நேரில் சென்று விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளூர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.