

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
புதுடெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் மறு விசாரணை நடத்தாமல் இருக்க, அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்த வழக்கில் மறு விசாரணை நடத்தாமல் இருக்க ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதாக, மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2023-ல் கைது செய்தனர்.
மேலும், அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி பணியாற்றும் மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத் துறையின் உதவி மண்டல அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அங்கித் திவாரி லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில், அமலாக்கத் துறை தரப்பிலும் வழக்குப் பதிவு செய்ததோடு, அங்கித் திவாரியிடம் துறை ரீதியாக தங்களது கட்டுப்பாட்டில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும். குறிப்பாக, அவர் லஞ்சம் வாங்கியது உண்மைதானா என்பதை விசாரிக்க வேண்டியுள்ளது.
எனவே, அவரை அமலக்கத் துறை வசம் ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து, அமலாகத் துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், லஞ்சம் வாங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் அங்கித் திவாரியை துறை ரீதியிலான கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்த உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அங்கித் திவாரிக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறை விசாரணை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. அதேவேளையில், அங்கித் திவாரி உச்ச நீதிமன்றத்தை அணுகி இடைக்கால ஜாமீன் பெற்றார்.
இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய் மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி, அமலாக்கத் துறை அதிகாரியான அங்கித் திவாரி லஞ்சம் பெற்று கையும் களவுமாக பிடிபட்ட நிலையில், அமலாக்கத்துறை தங்கள் அதிகாரி மீது தவறாக வழக்கு பதியப்பட்டிருப்பதாக தெரிவித்து வருகின்றனர், அப்படி இருக்கையில், அவர்களின் விசாரணையில் எப்படி உண்மை வெளிவரும்.
எனவே, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறையே விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவை நீக்க வேண்டுமென வலியுறுத்தியதோடு, இந்த விவகாரத்தில் தமிழக காவல் துறைக்கான விசாரணை அதிகார வரம்பை விட்டுக்கொடுக்க இயலாது என்றும் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு உண்மையானதா? - ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அமலாக்கத் துறை அதிகாரி லஞ்சம் பெற்ற வழக்கு விசாரணையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று மாநில அரசு உறுதியுடன் தெரிவித்து வருகிறது.
அதே வேளையில், அமலாக்கத் துறை அதிகாரி மீதான குற்றச்சாட்டு உண்மையானதா என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அங்கித் திவாரி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கும் பட்சத்தில், அந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கலாம் என தெரிவித்தனர்.
அப்போது, அமலக்கத் துறை தரப்பில் வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணை இரண்டு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.