உன்னிகிருஷ்ணன்
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட உன்னிகிருஷ்ணனுக்கு கேரள நீதிமன்றம் ஜாமீன்!
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறை கதவுகளில் இருந்து தங்கம் காணாமல் போனது தொடர்பான வழக்கில் முதன்மை குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணனுக்கு கேரள நீதிமன்றம் இன்று (ஜனவரி 21) ஜாமீன் வழங்கியது.
சபரிமலை கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலையில் இருந்த தங்கம் திருடு போனது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. எஸ்ஐடி-யைப் பொறுத்தவரையில் இரண்டு வழக்குகளை விசாரித்து வருகிறது. ஒன்று, துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்கம் மாயமானது தொடர்பானது. மற்றொன்று கோயில் கதவில் இருந்த சட்டங்களில் இருந்த தங்கம் காணாமல் போனது தொடர்பானது.
இந்த நிலையில்தான், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னி கிருஷ்ணன் இவ்வழக்கில் எஸ்ஐடியால் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆய்வுக்காக சிறப்பு புலனாய்வுக் குழு சபரிமலைக்குச் சென்று விசாரணை நடத்தியது.
இதனை தொடர்ந்து உன்னிகிருஷ்ணன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். சட்டப்படி 90 நாட்கள் முடிந்த பிறகும், வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்ற அடிப்படையில் அவர் ஜாமீன் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த கொல்லத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம், கருவறை கதவுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டது தொடர்பான வழக்கில் உன்னிகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கியது. இருப்பினும், கோயிலின் துவாரபாலகர் சிலைகளில் இருந்து தங்கம் காணாமல் போனது தொடர்பான வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால், உன்னிகிருஷ்ணன் தற்போதைக்கு சிறையிலேயே இருப்பார் என எஸ்ஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த இரண்டு வழக்குகளிலும், உன்னிகிருஷ்ணன் மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் இரண்டு முன்னாள் தலைவர்கள் உட்பட 12 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு இதுவரை கைது செய்துள்ளது.
