

புதுடெல்லி: குஜராத்தில் கடந்த ஆண்டு இரண்டு முதியவர்களிடம் நடத்தப்பட்ட மிகப்பெரிய ‘டிஜிட்டல் கைது’ மோசடி வழக்குகளை விசாரிக்க சிபிஐ தீவிரமாக களமிறங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த 2 முதியவரிடம் இருந்தும் மொத்தம் ரூ. 31 கோடி வரை சுருட்டப்பட்ட நிலையில் அதுகுறித்த விசாரணையை சிபிஐ தற்போது முடுக்கிவிட்டுள்ளது.
நம்நாட்டில் பெருகி வரும் டிஜிட்டல் மோசடிகளைக் கட்டுப்படுத்த சிபிஐ விரிவான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், சிபிஐ-யின் பொருளாதாரக் குற்றப்பிரிவு தற்போது புதிய முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்து, இந்த மோசடியின் பின்னணியில் மூளையாக செயல்பட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகிறது.
முதல் வழக்கில் ரூ.19.2 கோடி: குஜராத் காந்தி நகரைச் சேர்ந்த 74 வயது ஓய்வுபெற்ற பெண் மருத்துவர் ஒருவர், கடந்த 2025 மார்ச் மாதம் இந்த மோசடி கும்பலிடம் சிக்கியுள்ளார். தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எனத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த கும்பல், மருத்துவர் மீது சட்டவிரோதப் பணப் பரிமாற்றப் புகார் இருப்பதாகக் கூறி மிரட்டியுள்ளனர்.
வீடியோ கால் மூலம் அவரைத் தொடர்ந்து கண்காணிப்பிலேயே வைத்திருந்த மோசடி கும்பல், நான்கு மாதங்களுக்கும் மேலாக அவரை டிஜிட்டல் கைதில் வைத்துள்ளது. அவரது வங்கிக் கணக்குகள், வைப்பு நிதி , வீடு மற்றும் தங்க நகைகளை விற்கச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். அமலாக்கத் துறையின் போலி கடிதத் தலைப்புகளைக் காட்டி நம்பவைத்த அவர்கள், அவரிடமிருந்து மொத்தம் ரூ. 19.2 கோடியை பறித்துள்ளனர்.
2-ம் வழக்கில் ரூ.11.4 கோடி: மற்றொரு வழக்கில், அகமதாபாத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியை ஒருவரை ட்ராய் அதிகாரிகள் என கூறிக்கொண்டு கும்பல்அணுகியுள்ளது. அவரது ஆதார் விவரங்கள் குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி அவரை மிரட்டியுள்ளனர்.
பின்னர் அவரது கணவரையும் இந்த மிரட்டலுக்குள் கொண்டு வந்த கும்பல், அவர்களை அச்சுறுத்தி வங்கி கணக்கிலிருந்து ரூ. 11.4 கோடி பணத்தைப் பறித்துள்ளது. ‘சரிபார்ப்பு’ முடிந்ததும் பணம் திருப்பித் தரப்படும் என நம்பவைத்த மோசடியாளர்கள், பின்னர் தலைமறைவாகிவிட்டனர்.
இந்த இரண்டு வழக்குகளிலும் இழப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதால், பணப் பரிமாற்றம் நடந்த பாதைகளைக் கண்டறியவும், இதன் பின்னணியில் உள்ள சர்வதேசத் தொடர்புகள் குறித்து விசாரிக்கவும் சிபிஐ-யின் சிறப்புப் பிரிவு தற்போது களமிறங்கியுள்ளது.