

ஹைதராபாத்: தெலங்கானாவில் போக்குவரத்து துறை அதிகாரி ரூ.100 கோடிக்கும் மேல் சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அவரது வீடு உட்பட 11 இடங்களில் சோதனை நடத்தினர்.
தெலங்கானா மாநிலம், மஹபூப் நகர் இணை போக்குவரத்துத் துறை ஆணையராக பணியாற்றி வருபவர் எம். கிஷன். இவர் சட்டவிரோதமாக பல கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஹைதராபாத் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தர் தலைமையில் இத்துறை அதிகாரிகள், செகந்திராபாத் ராஜராஜேஸ்வரி நகரில் குடியிருக்கும் போக்குவரத்துத் துறை இணை ஆணையர் எம். கிஷன் வீடு உட்பட மஹபூப் நகர், நிஜாமாபாத், சங்காரெட்டி உள்ளிட்ட 11 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை செய்ய எம். கிஷன் வீட்டில் அதிகாரிகள் நுழைந்தபோது அவர் குளியலறையில் இருந்துள்ளார். அதிகாரிகள் வந்தது தெரிந்ததும் அவர் சுமார் 1 மணி நேரம் கழித்து வெளியே வந்தார். இதையடுத்து, அவருடைய மற்றும் அவரது வீட்டில் உள்ளவர்களின் செல்போன்கள், பீரோக்கள், அறைகள் என அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த சோதனையில் மொத்தம் ரூ.12.72 கோடி மதிப்புள்ள அசையா மற்றும் அசையும் சொத்து விவரங்கள் கிடைத்தன. இவற்றின் சந்தை மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகம் என தெரியவந்தது.
நிஜாமாபாத்தில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் கிஷனுக்கு 50% பங்கு உள்ளது. இதையடுத்து, அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. நிஜாமாபாத்தில் 3000 ச.அடியில் பர்னீச்சர் கடை, அஷோகா டவுன்ஷிப்பில் 2 வீடுகள், சங்காரெட்டியில் 31 ஏக்கர் விவசாய நிலம் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிஷனை அதிகாரிகள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார்.