ராகவ் சத்தா உள்பட 7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைய மாநிலங்களவைத் தலைவர் ஒப்புதல்

ராகவ் சத்தா உள்பட 7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைய மாநிலங்களவைத் தலைவர் ஒப்புதல்
Updated on
2 min read

புது டெல்லி: ஏழு ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கு, மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.

மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இணைப்புக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ஏழு ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டதை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றார்.

ஆம் ஆத்மி கட்சியை விட்டு வெளியேறிய ராகவ் சத்தா மற்றும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினை இழந்தது ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. தற்போது மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்துள்ளது.

ராகவ் சதா, சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகிய மூவரும் வெள்ளிக்கிழமை அன்று ஆம் ஆத்மி கட்சியிலிருந்து முறைப்படி ராஜினாமா செய்து, பாஜகவில் இணைந்தனர். ஹர்பஜன் சிங், ராஜேந்தர் குப்தா, விக்ரம்ஜித் சிங் சாஹ்னி மற்றும் சுவாதி மாலிவால் ஆகியோரும் பாஜகவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங், அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் பத்தி 4-இன் கீழ் இந்த இணைப்பை எதிர்த்தும், அந்த ஏழு எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரியும் மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் முறைப்படி மனு அளித்தனர்.

இருப்பினும், ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மற்றொரு கட்சியுடன் இணைந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று பத்தாவது அட்டவணை குறிப்பிடுகிறது. 10ல் ஏழு ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததன் மூலம் இந்த நிபந்தனை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாநிலங்களவைத் தலைவர் இந்த இணைப்புக்கு ஒப்புதல் அளித்தார்.

இந்த இணைப்பு குறித்து கிரண் ரிஜிஜு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 எம்.பிக்கள் பாஜகவுடன் இணைவதை மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்றுக்கொண்டுள்ளார். தற்போது, ராகவ் சதா, சந்தீப் பதக், அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால், ராஜேந்தர் குப்தா மற்றும் விக்ரம்ஜித் சிங் சஹ்னி ஆகியோர் பாஜக நாடாளுமன்றக் கட்சியின் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை என்பதையும், ஒருபோதும் ஒழுங்கீனத்தையோ அல்லது நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரான நடத்தையையோ வெளிப்படுத்தவில்லை என்பதையும் நான் நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ் தேசத்தைக் கட்டியெழுப்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இவர்கள் நல்வரவு. துக்கடே-துக்கடே இண்டியா கூட்டணிக்கு விடைகொடுத்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

ராகவ் சத்தா உள்பட 7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைய மாநிலங்களவைத் தலைவர் ஒப்புதல்
புதினுடனான சந்திப்பு போர் நிறுத்தம் பற்றி ஆலோசிக்க நல்ல வாய்ப்பு: ஈரான்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in