

ராகுல் காந்தி
புதுடெல்லி: சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள், நீட் வினாத்தாள் கசிவுப் பிரச்சினைகளுக்கு எதிராக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஜூன் 17-ம் தேதி நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிந்தது. இதையடுத்து, அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21-ல் மறு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டிலும் குளறுபடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று கூறியதாவது: தேர்வு முறைகேடுகள், நீட் வினாத்தாள் கசிவுப் பிரச்சினைகளுக்கு எதிராக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 17-ம் தேதி நாடு தழுவிய பிரச்சாரத்தை ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் தொடங்க உள்ளார். இதையடுத்து, அலகாபாத் (ஜூலை 10), பாட்னா (ஜூலை 10), டெல்லி (ஜூலை 14) ஆகிய இடங்களில் மாணவர் மாநாடுகளை நடத்த உள்ளார். இது வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான தேர்வர்கள், கல்வியாளர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகளை ஒன்றிணைக்கும்.
வினாத்தாள் கசிவால் இளைஞர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இப்பிரச்சாரத்தின் நோக்கமாகும். என்.எஸ்.யு.ஐ மற்றும் இளைஞர் காங்கிரஸ் மூலம் நாடு முழுவதும் நேரடி மற்றும் டிஜிட்டல் பரப்புரைகள், கல்வி நிறுவனங்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.
அரசியல் தொடர்புகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்களை ஒன்றிணைத்து, தேர்வுத் தோல்விகளுக்குப் பொறுப்பேற்க வலியுறுத்த இந்த இயக்கம் ஒரு தளமாக அமையும்.
நீட் தேர்வைப் பரவலாக்குதல், தேர்வுக்கான கட்டணங்களை ரத்து செய்தல் மற்றும் வினாத்தாள் கசிவு மோசடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யக் கோருவது போன்ற கோரிக்கைகளை இந்த இயக்கம் வீதிகளுக்குக் கொண்டு செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.