

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
புதுடெல்லி: வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்துது வினாத்தாள் கசிவை தடுக்க புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார். இதன்படி பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026 மாடாளுமன்ற இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து குடிய ரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக புதிய சட்டம் அனுப்பப்பட்டது. இதை பரிசீலித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த சட்டம் 2026-க்கு ஒப்புதல் வழங்கினார். இதுதொடர்பான அரசாணையை மத்திய சட்டத் துறை வெளியிட்டு உள்ளது.
தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட், ஜேஇஇ, கியூட், நெட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள், யுபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ், எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி, ஐபிபிஎஸ் நடத்தும் போட்டித் தேர்வுகள் புதிய சட்ட வரம்பின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன. வினாத்தாள் கசிவில் ஈடுபடும் தனி நபர்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
குழுவாக, கும்பலாக வினாத்தாள் கசிவில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும். வினாத்தாள் கசிவு குற்றவாளிகளின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும்.
வினாத்தாள் கசிவால் பொதுத் தேர்வு அல்லது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டால் அந்த தேர்வுக்கான செலவுத் தொகை முழுவதும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து வசூல் செய்யப்படும். வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளின் விசாரணையை 60 நாட்களுக்குள் போலீஸார் நிறைவு செய்ய வேண்டும். இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். பல்வேறு மாநிலங்கள் தொடர்பான வழக்கு என்றால் மத்திய அரசு சார்பில் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும்.