

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதிபா தேவிசிங் பாட்டீல், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர், ‘நாரி சக்தி வந்தன் அதினியம்' (மகளிர் இடஒதுக்கீடு சட்டம்) அமல்படுத்தப்படுவதை மறுமலர்ச்சிக்கான வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை என பாராட்டியுள்ளார். இது இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு மைல் கல் நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் பிரதிபா பாட்டீல் கூறியுள்ளதாவது: மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முயற்சியை நான் மனதாரப் பாராட்டுகிறேன். இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தம், சட்டப்பேரவைகளில் பெண்களின் பங்களிப்பையும் பிரதிநிதித்துவத்தையும் அதிகரிப்பதன் மூலம், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒரு மறுமலர்ச்சி நடவடிக்கையாகும். இந்தத் திருத்தம் என்பது வெறும் சட்ட விதியல்ல; இது பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தை வளர்ப்பதற்கும், வலிமையான முற்போக்கான இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கும் நாம் கொண்டுள்ள கூட்டு உறுதியின் வெளிப்பாடாகும்.
உயர்ந்த அதிகார அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பது, கொள்கை முடிவுகளைச் சமநிலையுடன் எடுக்க உதவும். பல்வேறு தரப்புப் பார்வைகளை உள்ளடக்கிய இத்தகைய நடைமுறை, இன்னும் கனிவான மற்றும் பிரதிநிதித்துவத் தன்மை கொண்ட கொள்கை முடிவுகளுக்கு வழிவகுக்கும். இந்த முற்போக்கான நடவடிக்கை, குறிப்பாகக் கிராமப்புற மற்றும் விளிம்பு நிலைச் சமூகங்களைச் சேர்ந்த எண்ணற்ற பெண்களின் லட்சியங்களுக்கு உயிர் கொடுக்கும். அவர்கள் தலைமைப் பொறுப்புகளை ஏற்கவும், தேச நிர்மாணத்தில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் பெரிதும் ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பிரதீபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.