மத்திய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்பு

பொறுப்பேற்ற பின் அளித்த நேர்காணலில் கூறியது என்ன?
மத்திய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்பு
Updated on
1 min read

புதுடெல்லி: நாட்டின் புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி இன்று (ஜூலை 26) பொறுப்பேற்றுக்கொண்டார்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான், நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதை அடுத்து, புதிய கல்வி அமைச்சராக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று பிரஹலாத் ஜோஷி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, கல்வி அமைச்சக்தின் மூத்த அதிகாரிகளுடன் அவர் தனது முதல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரஹலாத் ஜோஷி, “பிரதமர் என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துள்ளார். நேற்று நான் கர்நாடகாவில் இருந்தேன். நேற்று இரவே டெல்லி வந்து சேர்ந்தேன். இன்று காலை நான் பொறுப்பேற்றுக்கொண்டேன்.

இது எனக்கு புதிய துறை. இந்த துறையில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறேன். தகவல்களைச் சேகரித்து ஒட்டுமொத்த அமைச்சகத்தின் செயல்பாட்ட புரிந்து கொள்ள முயன்று வருகிறேன். இன்று நாங்கள் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தினோம். காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தொடர் ஆலோசனைகளைக் கூட்டங்களை நடத்தினேன். இது மிகப்பெரிய துறை என்பதால், இதை முழுமையாக புரிந்துகொண்ட பிறகு உங்களிடம் விரிவாகப் பேசுவேன்.” என தெரிவித்தார்.

கர்நாடகாவின் தார்வார் மக்களவைத் தொகுதியில் இருந்து ஆறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவரான 63 வயதாகும் பிரஹலாத் ஜோஷி, ஏற்கனவே நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்து வருகிறார்.

மத்திய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்பு
“பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் புதிய உச்சம்” - ‘மனதின் குரலில்’ பிரதமர் பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in