

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடந்த (அமெரிக்கா - இந்தியா) வர்த்தக ஒப்பந்தத்துக்கு மோடி நேற்று இரவு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை விற்றுவிட்டார்.
அவர் மீது கடுமையான அழுத்தம் உள்ளது. இதனால், நரேந்திர மோடியின் பிம்பம் சேதமடையக்கூடும். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், நமது பிரதமர் சமரசத்துக்கு உள்ளாகியுள்ளார். இதைப்பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும். முதல்முறையாக, குடியரசு தலைவர் உரை குறித்து பேச எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பிரதமர் மோடி சமரசத்துக்கு உள்ளாகியிருப்பதால், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயிகளின் கடும் உழைப்பை விற்றுவிட்டார். அவர் நாட்டை விற்றுவிட்டார். பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார், ஏனென்றால் அவருடைய பிம்பத்தை உருவாக்கியவர்களே இப்போது அந்த பிம்பத்தை உடைக்கின்றனர். தொழிலதிபர் அதானி மீது அமெரிக்காவில் ஒரு வழக்கு உள்ளது. அது உண்மையில் பிரதமர் மோடி மீதான வழக்குதான்.
எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும் வெளியிடாத பல விஷயங்கள் உள்ளன. அதன் காரணமாகவும் அழுத்தங்கள் உள்ளன. இவைதான் அந்த இரண்டு அழுத்த புள்ளிகள் என்று நம்புகிறேன். இதை நாடு புரிந்துகொள்ள வேண்டும். அதிபர் ட்ரம்பை மகிழ்விக்கவும், சமாதானப்படுத்தவும் அவரிடம் முழுமையாக சரண் அடைந்து விட்டார் மோடி. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.