

கொல்கத்தா: மேற்குவங்க பாஜக அரசு பதவியேற்பு விழாவின் போது 98 வயது பாஜக மூத்த தலைவர் மாகன் லால் சர்க்காரின் காலில் விழுந்து பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்.
மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியைச் சேர்ந்தவர் மாகன் லால் சர்க்கார். அவர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நெருங்கிய நண்பர் ஆவார். கடந்த 1952-ம் ஆண்டில் காஷ்மீரில் தேசியக் கொடியேற்றும் போராட்டத்தை சியாமா பிரசாத் நடத்தினார். இந்த போராட்டத்தில் மாகன் லால் சர்க்காரும் பங்கேற்றார். அப்போது அவர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டார்.
மாகன் லால் சர்க்கார், சிலிகுரி மாவட்ட பாஜக தலைவராக மிக நீண்ட காலம் பணியாற்றி உள்ளார். பல்வேறு மாவட்டங்களின் பாஜக ஒருங்கிணைப்பாளராகவும் அவர் பதவி வகித்துள்ளார். கடந்த 1980-களில் மேற்கு தினாஜ்பூர், ஜல்பைகுரி, டார்ஜிலிங் மாவட்டங்களில் சுமார் 10,000-க்கும் மேற்பட்டோரை பாஜகவில் அவர் இணைத்தார்.
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பாஜக பதவியேற்பு விழாவில் மாகன் லால் சர்க்கார் பங்கேற்றார். அப்போது விழா மேடையில் அவரது காலில் விழுந்து பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மேற்கு வங்கத்தில் முதல்முறையாக பாஜக அரசு பதவியேற்று உள்ளது. இந்த நேரத்தில் சியாமா பிரசாத் முகர்ஜியை நினைவுகூர்கிறேன். குறிப்பாக நாட்டுக்காகவும் மேற்கு வங்கத்துக்காகவும் அவர் அளித்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன்.
கொல்கத்தா பதவியேற்பு விழாவில் தேசியவாதி மாகன் லால் சர்க்காரை சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. அவர், சியாமா பிரசாத் முகர்ஜியோடு இணைந்து பணியாற்றியவர் ஆவார். அவரோடு இணைந்து ஜம்மு காஷ்மீர் போராட்டத்தில் பங்கேற்றவர். தனது வாழ்நாளை பாஜகவுக்காக அவர் ஒதுக்கி உள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜக ஆழமாக கால் ஊன்ற அவர் முக்கிய பங்காற்றி இருக்கிறார். மாகன் லால் சர்க்கார் போன்ற பாஜக தலைவர்களால் கட்சி வலுவடைகிறது. அவரை நினைத்து பாஜக மிகுந்த பெருமிதம் கொள்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்