பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியா நாட்டின் உயரிய சிவிலியன் விருது

பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியா நாட்டின் உயரிய சிவிலியன் விருது
Updated on
1 min read

பிராட்டிஸ்லாவா: அரசுமுறைப் பயணமாக ஸ்லோவாக்கியா நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ‘தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ்’ வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

ஸ்லோவாக்கியா அதிபர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், அந்நாட்டு அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 33-வது சர்வதேச விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

1993-ம் ஆண்டு ஸ்லோவாக்கியா சுதந்திர நாடாக உருவெடுத்த பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் அங்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தில், அதிபர் மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை அதிபர் பெல்லெக்ரினி நேரில் வரவேற்றார். தொடர்ந்து, அதிபர் மாளிகையின் விருந்தினர் புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர். இந்த உயர்மட்டக் குழுவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக, ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். நிறைவாக, இரு நாடுகளுக்கும் இடையே டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழிலாளர் இடப்பெயர்வு உள்ளிட்ட முக்கிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, அதிபர் மாளிகை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு யோகா அமர்வில் பிரதமர் மோடியும், அதிபர் பெல்லெக்ரினியும் இணைந்து பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, பிரதமரின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரப் பெருமைகளை விளக்கும் வகையில் பிராட்டிஸ்லாவாவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்புப் புகைப்படக் கண்காட்சியையும் ஸ்லோவாக்கிய அதிபர் பிரதமருடன் இணைந்து பார்வையிட்டார். முன்னதாக, இரண்டாம் உலகப் போரில் ஸ்லோவாக்கியாவின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியா நாட்டின் உயரிய சிவிலியன் விருது
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப், ஈரான் சபாநாயகர் ஆன்லைனில் கையெழுத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in