புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டில் ஈடுபட்டவர்களை தண்டனையில் இருந்து தப்பவிடக் கூடாது என்று மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் காணிக்கைகள் திருடப்பட்ட விவகாரம் குறித்தும், நிதி முறைகேடுகள் குறித்தும் நாள்தோறும் ஊடகங்களில் வெளிவரும் பல்வேறு தகவல்களால் ஆழ்ந்த கவலை எழுந்துள்ளது. இது மிகவும் தீவிரமான ஒரு விஷயமாகும்.
இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் எக்காரணம் கொண்டும் தண்டனையில் இருந்து தப்பிவிடக் கூடாது. அதேநேரத்தில், இந்த விவகாரத்தை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதும் சரியல்ல.
இந்தக் கோயிலில் பக்தியுடன் செலுத்தப்படும் காணிக்கைகள் தொடர்பாக இனி எவ்வித புகாரும் எழாதவாறு இருக்க, நாட்டின் புகழ்பற்ற பல்வேறு கோயில்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை இங்கும் பின்பற்றி, இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பது பொருத்தமானதாக இருக்கும்.
அரசியலில் குற்றமயமாதல், குற்றச் செயல்களை அரசியலாக்குதல், மதத்தை அரசியலாக்குதல், அரசியலில் கண்மூடித்தனமான மதப்பற்று ஆகியவற்றை நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று பகுஜன் சமாஜ் போன்ற அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது சரியானது, அரசியலமைப்புக்கு உட்பட்டது, சக குடிமக்களுக்கு விடுக்கப்படும் வேண்டுகோளும்கூட” என தெரிவித்துள்ளார்.