

புதுடெல்லி: “வாக்குத் திருட்டுதான் மிகப் பெரிய தேச விரோத செயல்” என்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக குறிப்பிட்டார்.
மக்களவையில் இன்று நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, “இந்தியா என்பது 150 கோடி மக்களின் பிணைப்பு. இதற்கு ஆதாரமாக இருப்பது வாக்குகள். மக்களவையோ, மாநிலங்களவையோ, சட்டப் பேரவையோ, பஞ்சாயத்துகளோ வாக்குகள் இல்லாவிட்டால் இவை எதுவும் இருக்காது. நாடு இதுவரை கண்ட அனைத்து சாதனைகளும் வாக்களிப்பதன் காரணமாகவே நிகழ்ந்துள்ளன.
ஆனால், இதைக் கைப்பற்ற ஆர்எஸ்எஸ் முயல்கிறது. நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்ற ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது” என்றார்.
அப்போது, ஆளும் தரப்பு எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து தேர்தல் சீர்திருத்தம் குறித்து பேசுமாறு சபாநாயகர் ராகுல் காந்தியை கேட்டுக்கொண்டார். அப்போது, தேர்தல் சீர்திருத்தம் குறித்து ராகுல் காந்தி எதுவும் பேசவில்லை என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டினார்.
தனது உரையை தொடர்ந்த ராகுல் காந்தி, “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவால் தேர்தல் ஆணையம் கைப்பற்றப்பட்டுள்ளது. பல நிறுவனங்களை இவை கைப்பற்றியுள்ளன. என்றாலும், முதலில் கைப்பற்றப்பட்டது தேர்தல் ஆணையம். அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு அமைப்பு, சிபிஐ போன்ற நிறுவனங்களும்கூட கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தேர்தலை வடிவமைக்க தேர்தல் ஆணையம் இவர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
தேர்தல் ஆணையராக யார் வர வேண்டும் என்பதில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஏன் இத்தனை அக்கறை காட்டுகின்றனர்? வாக்கு திருட்டைவிட மிகப் பெரிய தேச விரோத செயல் வேறில்லை" என்று ராகுல் காந்தி பேசினார்.
ராகுல் காந்தியின் உரைக்கு பதில் அளிக்கும் விதமாகப் பேசிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, "நான் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவன். இதில் நான் பெருமைப்படுகிறேன். முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக நெறிமுறைகளில் சமரசம் செய்து கொண்ட கட்சி காங்கிரஸ். நேரு அதிகாரத்தில் இருந்தது முதல் இதுதான் நடந்து வருகிறது" என்றார்.