

மம்தா பானர்ஜி | உத்தவ் தாக்கரே
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆனால், கடந்த கால நாடாளுமன்றத்தை விட இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் புது பரிமாணம் பெற்றுள்ளது.
மேற்கு வங்க தேர்தலில் தோல்வி அடைந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் (டிஎம்சி), மொத்தம் உள்ள 29 எம்.பி.க்களில் 20 பேர் நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா (என்சிபிஐ) என்ற கட்சியில் இணைந்தனர்.
இது கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேருக்கும் தனி இருக்கைகளை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் ஒதுக்கிவிட்டார். ஆனால், என்சிபிஐ கட்சி அங்கீகாரம் நிலுவையில் உள்ளது.
எனவே, சயோனி கோஷ் மற்றும் யூசுப் பதான் போன்ற திரிணமூல் எம்.பி.க்கள் இனி மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜியுடன் காணப்பட மாட்டார்கள். இதுவரை மக்களவையில் டிஎம்சி காட்டிய எதிர்ப்பு இனி இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) பிரிவைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் இனி ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் காணப்படுவார்கள். இதை சபாநாயகர் பிர்லா அங்கீகரித்துள்ளார். இதன் காரணமாக, ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.பி.க்களின் எண்ணிக்கை மக்களவையில் 7-ல் இருந்து 13 ஆக உயர்ந்துள்ளது. தற்போது உத்தவ் அணியில் 3 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் அதிருப்தி எம்.பி.க்களின் பதவிகளைப் பறிக்க வேண்டும் என்று மம்தாவின் டிஎம்சி, உத்தவின் சிவசேனா (யுபிடி) கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
இதற்கு முன்னதாக அரசியலமைப்பு மற்றும் சட்ட அம்சங்களுடன் சேர்த்து, இதேபோன்ற சூழல்களில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் முன்னாள் சபாநாயகர்கள் எடுத்த முந்தைய முடிவுகள், நடைமுறைகளை சபாநாயகர் பரிசீலித்து வருகிறார்.
மேலும், தமிழகத்தில் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியதால், நாடாளுமன்றத்தில் தனி இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று திமுக கோரியுள்ளது. இதனால், மக்களவையில் இதுவரை ஒரே குரலில் பேசி வந்த எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி வலுவிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற மாற்றங்களால் மழைக்காலக் கூட்டத்தொடரின் மக்களவை இருக்கைகள் முற்றிலும் மாறுகின்றன. இதன்மூலம், ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான அரசியல் சம நிலையில் ஒரு புதிய அத்தியாயமும் தொடங்கி உள்ளது. இதை மத்திய அரசு சாதகமாக்கி, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற தீவிரமாக உள்ளது.