

டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தேமுதிகவின் சுதீஷ் உள்ளிட்டோர். படம்: பிடிஐ
புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி டெல்லியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக உட்பட 40 கட்சிகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்துக்கு மத்தியபாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமை வகித்தார். மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, அந்த கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள், மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். பின்னர் 20 எம்.பி.க்களும் திரிபுராவை சேர்ந்த தேசியவாத குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைந்தனர்.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் என்சிபிஐ கட்சியை சேர்ந்த 20 எம்.பி.க்களும் பங்கேற்றனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்பேசம் தெரிவித்தன. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.வெளிநடப்புக்குப் பிறகு எதிர்க்கட்சி தலைவர்கள் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சுமுகமாக நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
‘நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு உரிய நேரம் ஒதுக்கப்பட வேண்டும். மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதி வழங்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ‘எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. மக்களின் நலன் கருதி இரு அவைகளிலும் ஆக்கப்பூர்வமாக விவாதங்களை மட்டுமே நடத்த வேண்டும்’ என்று மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, “அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் பரிமாறப்பட்டன. நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது அனைத்து கட்சிகளின் பொறுப்பு’’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், ‘‘மக்களவையின் மாண்பை அனைத்து உறுப்பினர்களும் பாதுகாக்க வேண்டும். அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த வேண்டும்’’ என்று மக்களவை எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தினார்.