

காஜியாபாத்: உத்தர பிரதேசம் காஜியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் சூர்ய பிரதாப் சவுகான் (17). இவரை இவரது நண்பர் ஆசாத் பக்ரீத் பண்டிகைக்கு அழைத்துள்ளார்.
இதனால் சூர்ய பிரதாப் சவுகான் ஆசாத்தை பார்க்க கடந்த 28-ம் தேதி சென்றார். அப்போது காஜியாபாத்தின் கோடா பகுதியில் சூர்ய பிரசாத் சவுகானை ஆசாத் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இச்சம்பவம் காஜியாபாத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்து அமைப்புகள் இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன. கொலையாளிகளை உடனடியாக போலீஸார் கைது செய்து என்கவுன்டரில் சுட்டுக் கொல்ல வேண்டும் என சூர்ய பிரசாத் குடும்பத்தினரும், இந்து அமைப்புகளும் கோரிக்கை விடுத்தனர். போலீஸார் ஆசாத் கூட்டாளிகள் 3 பேரை கைது செய்த நிலையில், முக்கிய குற்றவாளி ஆசாத்தை பல இடங்களில் போலீஸார் தேடினர்.
அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆசாத் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.50,000 பரிசுத் தொகையை போலீஸார் அறிவித்தனர். இந்நிலையில் ஆசாத் காஜியா பாத்தை விட்டு மோட்டார் சைக்கிளில் தப்ப முயற்சிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் சாலைகளில் தடுப்புகள் அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்களில் வந்த ஆசாத் மற்றும் அவரது நண்பரை போலீஸார் இடை மறித்தனர்.
அப்போது போலீஸாரை நோக்கி ஆசாத் துப்பாக்கியால் சுட்டார். போலீஸார் திருப்பி சுட்டதில் ஆசாத்திற்கு குண்டு காயம் ஏற்பட்டது. அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், ஆசாத் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சூர்ய பிரசாத் கொலையில் தொடர்புடைய அனைவரையும் போலீஸார் சுட்டுக் கொல்ல வேண்டும் எனவும், அவர்களது வீடுகளை புல்டோசர் மூலம் தகர்க்க வேண்டும் எனவும் பிரசாத்தின் தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.