“தொகுதி மறுவரையறையால் யாருக்கும் இழப்போ, ஆதாயமோ இல்லை” - சந்திரபாபு நாயுடு கருத்து

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு
Updated on
1 min read

கோவை: “தொகுதி மறுவரையறையால் யாரும் எதையும் இழக்கப் போவதில்லை. அதேசமயம், யாருக்கும் கூடுதல் ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை. அனைவருக்கும் சமமான அளவிலேயே ஆதாயம் கிடைக்கும்” என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதற்காக, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று கோவைக்கு வருகை தந்தார்.

கோவையில் உள்ள தெலுங்கு மன்றத்தின் உறுப்பினர்களிடம் பேசிய அவர், என்டிஏவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தொகுதி மறுவரையறை குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கேள்விகளில் என்ன நியாயம் இருக்கிறது? ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்போகிறது. அப்படியிருக்கையில், உங்களுக்கு என்னதான் பிரச்சினை? அதற்கு நீங்கள்தான் பதிலளிக்க வேண்டும்.

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை விகிதாசார அடிப்படையில் 50 சதவீதம் அதிகரிக்கப்போகிறது என்றால், மாநிலங்கள் எப்படித் தங்கள் இடங்களை இழக்க முடியும் என்பது குறித்து உங்களுக்குச் சிறிதளவேனும் புரிதல் இருக்க வேண்டும். யாரும் எதையும் இழக்கவில்லை. அதேசமயம், யாருக்கும் கூடுதல் ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை. அனைவருக்கும் சமமான அளவிலேயே ஆதாயம் கிடைக்கும். அதோடு மட்டுமல்லாமல், பெண்களுக்கு இட ஒதுக்கீடும் கிடைக்கும்.

பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாததை நீங்கள் என்டிஏவுக்கு ஏற்பட்ட தோல்வி என்று கருதுகிறீர்கள். ஆனால் உண்மையில், இது பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வியாகும். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் பெண்கள் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். உங்கள் மீது அந்தப் பெண்கள் கொண்டுள்ள கோபத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த மசோதாவை நிறைவேற்றுவது உங்களுக்கு அவ்வளவு எளிதான காரியமல்ல; ஏனெனில், இதற்கு ஓர் அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஆகிய இருவரிடமும் நான் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்: இந்த மசோதாவால் தென் இந்தியாவுக்கு ஏற்படப்போகும் இழப்பு என்ன? நாடாளுமன்றத்தில் தென்னிந்தியாவின் விகிதாசாரப் பங்கை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்று நான் அமித் ஷாவிடம் வெகு காலத்திற்கு முன்பே கேட்டுக் கொண்டேன், அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்” என்றார்.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு
போரில் இதுவரை 3,375 பேர் உயிரிழப்பு: ஈரான் தடயவியல் துறைத் தலைவர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in