

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிஹார் அரசு ரூ.314 கோடி செலவில் நவீன 30 மாடிக் கட்டிடம் கட்ட உள்ளது. டெல்லி சாணக்யபுரியில் பிஹார் அரசுக்கு சொந்தமாக ‘பிஹார் சதன்’ எனும் பெயரில் ஒரு கட்டிடம் உள்ளது. இது, தமிழக அரசின் தமிழ்நாடு இல்லத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
பிஹார் சதனில் அம்மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்கிச் செல்கின்றனர். இதேபோன்ற வசதிகளுக்காக மும்பையிலும் பிஹார் அரசு நவீன 30 மாடிக் கட்டிடம் கட்ட உள்ளது. இதற்காக முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை நேற்று ரூ.314.20 கோடி ஒதுக்கியது.
பிஹாரிலிருந்து பல்வேறு பணிகளுக்காக அம்மாநில மக்கள் மும்பை வருகின்றனர். பிஹாரில் நவீன மருத்துவ சிகிச்சைகள் குறைவு. இதற்காக பிஹார்வாசிகள் டெல்லி, மும்பை மற்றும் மேற்கு வங்கத்துக்கு செல்ல வேண்டிள்ளது. இதனால் சிகிச்சைக்காக மும்பைக்கு அதிகம் வருகின்றனர். இவர்களுக்கும் இவர்களின் குடும்பத்தினருக்கும் இந்தக் கட்டிடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிதிஷ் குமார் அரசு கருதுகிறது.
மும்பை துறைமுக அறக்கட்டளை அதிகார வரம்புக்கு உட்பட்ட எல்ஃபின்ஸ்டோன் எஸ்டேட் பகுதியில் சுமார் 0.68 ஏக்கர் நிலத்தில் இது கட்டப்பட உள்ளது. இக்கட்டிடம், நவீன நகர வடிவமைப்புக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழும். அடித்தளத்துடன் சேர்த்து சுமார் 30 தளங்கள் கொண்ட இந்தக் கட்டிடம், தரையில் இருந்து சுமார் 69 மீட்டர் வரை உயர்ந்து நிற்கும்.
இந்தக் கட்டிடம் அரசுப் பணிகள் மற்றும் கூட்டங்களுக்கான வசதிகள் மற்றும் அலுவலர்களுக்காக குடியிருப்புகளை கொண்டிருக்கும். மேலும் பிஹாரை சேர்ந்த நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினருக்காக 240 படுக்கைகள் கொண்ட தங்குமிடமும் இடம்பெறும். குறைந்த செலவில் பாதுகாப்பான, வசதியான தங்குமிடத்தை இது வழங்கும். இது பிஹார் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மும்பையை போன்று தமிழ்நாட்டுக்கும் பிஹார்வாசிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். இதனால் தமிழ்நாட்டிலும் விரைவில் ஒரு பிஹார் பவனை அமைக்க நிதிஷ் குமார் அரசு திட்டமிடுவது குறிப்பிடத்தக்கது.