

புதுடெல்லி: நீட் தேர்வு விண்ணப்பத் தொகையைத் திரும்பப் பெற தேர்வர்கள் தங்களது வங்கி விவரங்களை மே 27 வரை பதிவேற்றலாம் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக இந்த மாதம் 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து புதிய தேர்வு வரும் ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என்று என்டிஏ அறிவித்துள்ளது.
இந்நிலையில் 2026 நீட் தேர்வர்களுக்காக ஒரு புதிய இணையதளத்தை நேற்று முன்தினம் என்டிஏ தொடங்கியுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு விண்ணப்பத் தொகையைத் திரும்பப் பெறுவதற்காக அந்த இணையதளத்தை அணுகி தங்களது வங்கி விவரங்களை வரும் 27-ம் தேதி வரை பதிவேற்றலாம்.
வரும் 27-ம் தேதி இரவு 11.50 மணி வரை தேர்வர்கள் தங்களது வங்கி விவரங்களை பதிவேற்ற முடியும். அந்த இணையதளத்தில் தேர்வர்களின் பெயர் விவரம், வங்கியின் பெயர், வங்கிக் கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி கோட், ரத்து செய்யப்பட்ட வங்கிக் காசோலை (ஸ்கேன் செய்யப்பட்ட நகல்) ஆகியவற்றை அதில் பதிவு செய்ய வேண்டும்.
வரும் 27-ம் தேதி இரவு 11.50 மணி வரை பதிவேற்றப்படும் தகவல்களே இறுதியானவை என்று என்டிஏ அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.