

டாக்கா: வங்கதேசத்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.
டாக்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடியின் வாழ்த்துக் கடிதத்தை அவரிடம் நேரில் வழங்கினார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பன்முகத் தன்மையிலான உறவை வலுப்படுத்தவும், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தவும் தாம் ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் உடன் இருந்தார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆலோசனையில், வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
தாரிக் ரஹ்மான் தனது மனைவி சுபைதா ரஹ்மான் மற்றும் மகள் ஜைமாவுடன் இந்தியா வர வேண்டும் என்று பிரதமர் மோடி அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.. வங்கதேச மக்கள் தாரிக் ரஹ்மான் தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், நாட்டின் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் ஆணைக்கும் இத்தேர்தல் வெற்றி ஒரு சான்று என்று பாராட்டியுள்ளார்.