

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் உள்ள சத்னா மற்றும் ஒண்டா ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மம்தா பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: பாஜக அரசு புதிதாக தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வந்து, மேற்கு வங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளை பீகார் மற்றும் ஒடிசாவுடன் இணைக்க அவர்கள் முயல்கின்றனர். இதன் மூலம் அந்தப் பகுதிகளில் வசிக்கும் வங்க மொழி பேசும் மக்கள் கடும் சித்திரவதைக்கு உள்ளாவார்கள். பெங்காலிகளின் ஒற்றுமையைச் சிதைக்கவே இந்தச் சதி நடக்கிறது.
திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த பாஜக ரூ.1,000 கோடி பேரம் பேசியுள்ளது. இதற்கு, ஆம் ஜனதா உன்னயன் கட்சி தலைவர் ஹுமாயூன் கபீர் தொடர்பான வீடியோவே சாட்சியாக உள்ளது. சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரித்து திரிணமூல் காங்கிரஸைத் தோற்கடிக்க ரூ.1,000 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் முன் பணமாக ரூ.200 கோடி கைமாறியுள்ளது.
தேர்தல் நேரத்தில் பாஜகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயல்வார்கள். வாக்குப் பதிவு முடிந்ததும் அளித்த வாக்குறுதிகளை மறந்துவிடுவார்கள். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு மம்தா பேசினார்.