திரிணமூல் காங். மாநில தலைவராக நியமிக்கப்பட்ட ஒரே மாதத்தில் சந்த்ரிமா பட்டாச்சார்யா ராஜினாமா

திரிணமூல் காங். மாநில தலைவராக நியமிக்கப்பட்ட ஒரே மாதத்தில் சந்த்ரிமா பட்டாச்சார்யா ராஜினாமா
Updated on
2 min read

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநில தலைவரும், மம்தா பானர்ஜியின் நெருங்கிய தோழியுமான சந்த்ரிமா பட்டாச்சார்யா மாநில தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்து வந்த கட்சியின் மூத்த தலைவர் சுப்ரதா பக்‌ஷி, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதை அடுத்து அந்தப் பதவிக்கு கடந்த ஜூன் 3-ம் தேதி சந்த்ரிமா பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டார். மம்தா பானர்ஜியின் நெருக்கிய தோழியான இவர், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசில் நிதி, சுகாதாரம், பஞ்சாயத்து, ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளுக்கான அமைச்சராக பதவி வகித்தவர்.

தனது ராஜினமா குறித்து மம்தா பானர்ஜிக்கு சந்த்ரிமா பட்டாச்சார்யா எழுதியுள்ள கடிதத்தில், “ஜூன் 3 அன்று காளிகாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் எனக்கு வழங்கப்பட்ட அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினமா செய்கிறேன். தற்போது நான் வகிக்கும் மற்ற அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுகிறேன்.

பல்வேறு வங்கிகளில் பராமரிக்கப்படும் கணக்குகள் தொடர்பாக டிஎம்சி மற்றும் அது சார்ந்த பிற அமைப்புகளின் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவர் என்ற பொறுப்பில் இருந்தும் நான் விலகிக்கொள்கிறேன். இந்திய தேர்தல் ஆணையத்தின் முன் உங்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாகச் செயல்படுவதில் இருந்தும் நான் விலகுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “யார் மீதும் எனக்கு எந்த குற்றச்சாட்டும் இல்லை. நம்பிக்கையைக் காப்பாற்றத் தவறிவிட்டேனோ என்ற வருத்தம் எனக்குள் இருக்கிறது. டிஎம்சி பவனை நான் ஒப்படைத்துவிட்டதாக கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி என்னிடம் கூறினார். நான் மனவேதனை அடைந்துள்ளேன். பவனை ஒப்படைக்க நான் யார்?” என தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவின் கிழக்கு பெருநகர பைபாஸ் அருகேயுள்ள கட்சியின் தலைமையகமான டிஎம்சி பவனை, தாங்கள்தான் உண்மையான டிஎம்சி என கூறும் அதிருப்தி பிரிவினர் நேற்று கைப்பற்றினர்.

அப்போது கட்டிடத்துக்குள் இருந்த சந்த்ரிமா பட்டாச்சாரியா இதைத் தடுக்கவில்லை என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பிய நிலையில் அவர் தனது அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக சந்த்ரிமா பட்டாச்சார்யா, அதிருப்தி டிஎம்சியில் இணைவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த கேள்விக்கு, “இது குறித்து நான் கருத்து எதுவும் தெரிவிக்க மாட்டேன். காலம்தான் பதில் சொல்லும்” என சந்த்ரிமா பட்டாச்சார்யா தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 இடங்களில் பாஜக 208 இடங்களைக் கைப்பற்றியது. டிஎம்சி 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து, டிஎம்சியைச் சேர்ந்த 58 எம்எல்ஏக்கள் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் அதிருப்தி அணியில் இணைந்தனர்.

அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக ரிதப்ரதா பானர்ஜி கடந்த ஜூன் 3ம் தேதி அங்கீகரிக்கப்பட்டார். தொடர்ந்து கட்சியின் தலைவராக அரூப் ராய் தேர்வு செய்யப்பட்டார். டிஎம்சியின் மூத்த தலைவரான அரூப் ராய், மம்தா பானர்ஜி அரசில் அமைச்சராக இருந்தவர்.

திரிணமூல் காங். மாநில தலைவராக நியமிக்கப்பட்ட ஒரே மாதத்தில் சந்த்ரிமா பட்டாச்சார்யா ராஜினாமா
காவல் துறையை வைத்து மிரட்டி கட்சிக்கு ஆள் சேர்க்க தவெக தீவிரம்: திமுக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in