

புது டெல்லி: ஜந்தர் மந்தரிலிருந்து தான் அகற்றப்பட்டது சட்டவிரோதக் காவல் நடவடிக்கை என்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையிலிருந்து தெரிவித்தார். மேலும், நாளை (ஜூலை 20) கரப்பான்பூச்சி ஜனதா கட்சி திட்டமிட்டுள்ள நாடாளுமன்றப் பேரணியை வெற்றியடையச் செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
21-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் நேற்று டெல்லி காவல்துறையினரால் கட்டாயமாக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து இன்று அவர் மருத்துவமனையிலிருந்து அனுப்பியுள்ள செய்தியில், “ஜூலை 20-ம் தேதி இரண்டாவது சுதந்திரப் போராட்டம். அச்சமற்ற இந்தியா, அநீதியற்ற இந்தியா. அநீதியிலிருந்து விடுதலை (தேர்வு வினாத்தாள் கசிவு போன்றவை), அச்சத்திலிருந்து விடுதலை (என்னைச் சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருப்பது) நோக்கியது இந்தப் போராட்டம்.
இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமான, நாடாளுமன்றத்தை நோக்கிய இப்பேரணியை மாபெரும் வெற்றியடையச் செய்யுங்கள். இந்தச் செய்தி சஃப்தர்ஜங்கில் நான் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து கீதாஞ்சலி மூலம் அனுப்பப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி என்ன? - நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட போட்டித் தேர்வு முறைகேடு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி சுற்றுச் சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 28-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார். அவருடன் அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டம் நேற்று முன்தினம் 20 நாட்களைக் கடந்த நிலையில் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்தது. அவர் சுமார் 9 கிலோ எடையை இழந்தார். அவரது உயிரைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் 2 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
இந்நிலையில், சோனம் வாங்சுக் மற்றும் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தினமும் 2 முறை உடல்நல பரிசோதனை செய்யுமாறு 3 அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டது.
போராட்டம் நேற்று 21-ம் நாளை எட்டியது. இந்நிலையில், மருத்துவ பணியாளர்களும் சாதாரண உடை அணிந்த போலீஸாரும் நேற்று காலை 7.30 மணிக்கு ஜந்தர் மந்தருக்குச் சென்றனர். அங்கு உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த வாங்சுக்கை தூக்கி வாகனத்தில் ஏற்றினர்.
பின்னர் அவரை விஎம்எம்சி சப்தர் ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, உயர் நீதிமன்ற உத்தரவின்படி சோனம் வாங் சுக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது, அங்கிருந்த போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.