

டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, செங்கோட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.படம்: பிடிஐ
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை, முக்கிய வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்த லஷ்கர் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி செங்கோட்டை, சாந்தினி சவுக்கில் ஒரு கோயில் உட்பட நாடு முழுவதும் முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் தீவிரவாத அமைப்பு, தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, டெல்லி செங்கோட்டை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், நாடு முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி 6-ம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மசூதி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். இதக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. எனினும், இந்தத் தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2025, நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 24 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளின்படி, ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழக மருத்துவர் உமர் முகமது என்பவர் அந்தக் காரை ஓட்டிச் சென்றதும் அவர் உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது.