

கான்பூர்: உ.பி.யில் பிரபல புகையிலை தொழிலதிபர் கே.கே.மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா. இவர் கடந்த 8ம் தேதி லம்போர்கினி ரெவுல்டோ சொகுசு காரில் அதிவேகமாக சென்று மோதியதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து தலைமறைவான ஷிவம் மிஸ்ராவை 4 நாள் தேடுதலுக்கு பிறகு போலீஸார் நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்த மனுவில், "ஷிவம் மிஸ்ரா, மோகன் என்பவரை டிரைவராக காட்டியுள்ளார். ஆனால் விசாரணையில் ஷிவம் கார் ஓட்டியது உறுதியாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கு மறுநாள் கான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மோகன் (45) என்ற நபர் சரண் அடைந்தார். விபத்தின் போது தானே காரை ஓட்டியதாக தெரிவித்தார். ஆனால், இதுதொடர்பான மோகனின் விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இதற்கிடையில் ஷிவம் மிஸ்ராவுக்கு கான்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதாக அவரது வழக்கறிஞர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.