

மாதிரி படம்
புதுடெல்லி: வனப்பிரதேசம் நிறைந்த ஜார்க்கண்டில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. மேற்கு சிங்பும் மாவட்டத்தில் ஒரு முரட்டு யானை 2 வாரங்களில் 23 பேரை கொன்றுள்ளது.
இந்த விவகாரம் நேற்று ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏ ராமேஸ்வர் ஓரான் பேசுகையில், “யானைகளின் அச்சுறுத்தலை சமாளிக்க அரசு கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். யானை மற்றும் மனித மோதலைக் குறைக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காட்டு யானையால் ஏற்படும் உயிரிழப்புக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படுகிறது. இதை, ஒடிசா போன்று ரூ.6 லட்சமாக உயர்த்த வேண்டும்” என்றார்.
இதற்கு முதல்வர் ஹேமந்த் சோரன் பேசுகையில் “ஜார்க்கண்டில் யானை - மனித மோதல் கடுமையான சமூக மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடியாக மாறியுள்ளது. யானை நடத்தையில் ஏற்படும் மாற்றத்துக்கு சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அரசு முழு பிரச்சினையையும் கவனித்து வருகிறது.
மாநிலத்தில் பயிற்சி பெற்ற மீட்புக் குழு தற்போது இல்லை. இந்தக் குறை விரைவில் தீர்க்கப்படும். தமிழ்நாட்டில் இருந்து 6 கும்கி யானைகள் அழைத்து வரப்பட உள்ளன. இவை முரட்டு காட்டு யானைகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும்” என்றார்.