

புதுடெல்லி: அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் கடந்த 9ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதை பார்வையிடுவதற்காக 22 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச குழுவினர் 38 பேர் வந்திருந்தனர்.
இவர்கள் அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் கடந்த 8 மற்றும் 9 தேதிகளில், தேர்தல் நடவடிக்கைகளை பார்வையிட்டனர். தேர்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், வாக்காளர்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து பேசினர். வாக்குச் சாவடிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.
இது குறித்து நமீபியாவில் இருந்து வந்திருந்த பவுலஸ் ஷிக்வேதா கூறுகையில், ”வாக்குச் சாவடிகள் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன. அங்கு சக்கர நாற்காலி, குழந்தை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தது மிகவும் கவர்ந்தது” என்றார்.
சியரா லியோனைச் சேர்ந்த அபுபக்கர் மகமூத் கூறுகையில், ”இந்தியத் தேர்தலில் கண்ட மிகச் சிறந்த விஷயம் எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரம். இங்குக் கண்ட பல விஷயங்களை நாங்கள் எங்கள் நாட்டில் அமல்படுத்த முயற்சிப்போம்” என்றார்.