“உலக நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நெருக்கமாக செயல்படும்” - பிரதமர் மோடி

“உலக நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நெருக்கமாக செயல்படும்” - பிரதமர் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சந்தித்த நிலையில், உலக நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நெருக்கமாக செயல்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அப்போது, பாதுகாப்பு, தொழில்நுட்பங்கள், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, இணைப்பு, கல்வி, மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்து பிரதமருக்கு மார்கோ ரூபியோ விளக்கினார்.

மேற்கு ஆசிய நிலவரம் உட்பட பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த அமெரிக்காவின் கண்ணோட்டத்தை ரூபியோ பகிர்ந்து கொண்டார்.

அப்போது, அமைதி முயற்சிகளுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் மோதல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்ற தனது எண்ணத்தை மீண்டும் வலியுறுத்தினார். மேலும், அதிபர் ட்ரம்ப்புக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கெண்ட பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்ச்சியான கலந்துரையாடல்களை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் கூறினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மார்கோ ரூபியோ உடனான சந்திப்பை அடுத்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை வரவேற்றதில் மகிழ்ச்சி. இந்தியா - அமெரிக்கா இடையேயான ஆழமான ஒத்துழைப்புடன் கூடிய உத்திசார் உறவில் ஏற்பட்டுள்ள தொடர் முன்னேற்றங்கள் குறித்தும் பிராந்திய மற்றும் உலக அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம். உலக நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நெருக்கமாக செயல்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் வெளியிட்டுள்ள பதிவில், “வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சார்பில் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அழைப்பு விடுத்தார்.

பாதுகாபபு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அமெரிக்கா - இந்தியா இடையேயான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தினோம். இத்துறைகள் நமது இரு நாடுகளையும் வலுப்படுத்தி, சுதந்திரமான இந்தோ-பசுபிக் பகுதியை வலுப்படுத்துகின்றன. இந்தியா அமெரிக்காவின் ஒரு முக்கிய கூட்டாளி” என தெரிவித்துள்ளார்.

“உலக நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நெருக்கமாக செயல்படும்” - பிரதமர் மோடி
முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்: அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in