

இந்தியா - ஜப்பான் கூட்டு பொருளாதார மன்றத்தின் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்ட கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி. படம்: பிடிஐ
புதுடெல்லி: ஹரியானா மாநிலம் கார்கோடாவில் ரூ.35,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலையை பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியும் நேற்று தொடங்கி வைத்தனர். பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இந்தியா - ஜப்பான் வருடாந்திர மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று டெல்லிக்கு வந்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியும் அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது:
பிரதமர் மோடி: இந்தியாவின் ஆட்டோ மொபைல், மின்னணு துறை வளர்ச்சிக்கு ஜப்பான் முக்கிய பங்களிப்புகளை வழங்கி உள்ளது. தற்போது ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. பாதுகாப்பு தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுதவிர, மருந்து உற்பத்தி, மருத்துவ உபகரணங்கள், உயிரி தொழில்நுட்பம், நிதிச் சேவை தொடர்பாகவும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இந்தியா- ஜப்பான் பயோ காஸ் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் புதிதாக 1,000 பயோ காஸ், இயற்கை உரத் தொழிற்சாலைகள் கட்டப்படும். இதன்மூலம் இந்திய கிராமங்கள் வளர்ச்சி அடையும். இந்தியாவில் கச்சா எண்ணெய் கையிருப்பை அதிகரிக்கத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது. பேட்டரி, பசுமை ஹைட்ரஜன், அணுசக்தி, கப்பல் கட்டுமானம், விமான போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகள் இணைந்து பணியாற்றும்.
ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி: இந்தியாவின் பெட்ரோலிய கையிருப்பை அதிகரிக்க தேவையான தொழில்நுட்ப உதவிகளை ஜப்பான் வழங்கும். எரிசக்தி, அரியவகை கனிமங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும். ஜப்பான் - இந்திய கடற்படைகள் இணைந்து விரைவில் போர்ப் பயிற்சிகளில் ஈடுபடும். இரு நாடுகளும் இணைந்து ஆயுதங்களை உற்பத்தி செய்யும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
இரு நாடுகள் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் போர்க் கப்பல்களுக்கு தேவையான சிறப்பு ஆன்டெனாக்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதன்மூலம் எதிரிகளின் ரேடார்களால் இந்திய, ஜப்பானிய போர்க் கப்பல்களை கண்டுபிடிக்க முடியாது. வரும் காலத்தில் இணைந்து போர்க்கப்பல்கள் தயாரிக்கவும் கொள்கைரீதியில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹரியானாவின் கார்கோடாவில் ரூ.35,000 கோடி முதலீட்டில் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று மாலை நடைபெற்ற இந்திய - ஜப்பான் கூட்டு பொருளாதார மன்றக்கூட்டத்தின்போது பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியும் இணைந்து காணொலி வாயிலாக இந்த புதியகார் தொழிற்சாலையை தொடங்கி வைத்தனர். சுமார் 800 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஆலை உலகின் மிகப்பெரிய கார் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். முதல்கட்டமாக, இங்கு ஆண்டுக்கு 5 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படும்.
பின்னர் படிப்படியாக இது 10 லட்சம் வரை அதிகரிக்கப்பட உள்ளது. பொருளாதார மன்றக் கூட்டத்தில் சனே டகாய்ச்சி பேசியபோது, ‘‘மும்பை - அகமதாபாத் இடையே2027-ல் புல்லட் ரயில் சேவையைதொடங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான உதவிகளை ஜப்பான் வழங்கும். இந்த வழித்தடத்தில் ஜப்பானின் அடுத்த தலைமுறை புல்லட் ரயிலான இ-10 ஷிங்கன்சென் அறிமுகம் செய்யப்படும்’’ என்றார். இந்தபுல்லட் ரயில்கள் மணிக்கு 320 முதல் 400 கி.மீ. வேகத்தில் செல்லும். இதன்மூலம் மும்பையில் இருந்து 2 மணி நேரத்தில் அகமதாபாத் செல்ல முடியும்.
என் தங்கை டகாய்ச்சி: மோடி நெகிழ்ச்சி
டெல்லியில் இந்தியா - ஜப்பான் கூட்டு பொருளாதார மன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ‘‘ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை சனே டகாய்ச்சி பெற்றுள்ளார். அவர் எனது அழகிய இளம் தங்கை. அவர் ஜப்பானின் நாரா பகுதியை சேர்ந்தவர். இந்த பகுதி இந்தியா - ஜப்பான் இடையிலான புத்தமதப் பாரம்பரியத்தின் மையமாக விளங்குகிறது’’ என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய சனே டகாய்ச்சி, ‘‘பிரதமர் மோடி, என்னை தங்கை என்று அழைத்து உறவு பாராட்டினார். அவர் எனது அண்ணன். நாங்கள் இருவரும் அண்ணன், தங்கையாக செயல்படுவோம்’’ என்று தெரிவித்தார்.
உள்ளூர் கரன்சியில் வணிகம்: இந்தியாவும், ஜப்பானும் தற்போது டாலரில் வணிகம் மேற்கொள்கின்றன. இதற்கு மாற்றாக, இந்திய ரூபாய் மற்றும் ஜப்பானின் யென் கரன்சியில் வணிகம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் இரு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் நேரம், பணம் மிச்சமாகும். இதுதொடர்பாக கடந்த ஆண்டிலேயே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த திட்டத்தை முழுமையாக அமல்படுத்த தீவிரம் காட்டப்படுகிறது.