

புதுடெல்லி: எங்களது மிக நெருங்கிய நட்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த நேரத்தில் எங்களுக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. நாங்களும் இந்தியாவுக்கு நிச்சயம் உதவி செய்வோம் என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இதன்காரணமாக ஈரானை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்தை அந்த நாட்டு ராணுவம் முடக்கி உள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் தொலைபேசியில் விரிவான ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அதேநேரம் இந்த விவகாரத்தில் ஈரான் அரசு இந்தியாவுக்கு எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை என்று சில செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலி டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரான் - இந்தியா இடையே மிக நீண்ட காலமாக நட்புறவு நீடிக்கிறது. எங்களது மிக நெருங்கிய நட்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய சரக்கு கப்பல்கள் கடந்து செல்ல விரைவில் அனுமதி வழங்கப்படும்.
போரால் நாங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளோம். இந்த நேரத்தில் எங்களுக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. நாங்களும் இந்தியாவுக்கு நிச்சயம் உதவி செய்வோம். இந்தியா - ஈரான் அரசுகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளில் இந்திய கொடியுடன் 28 கப்பல்கள் நிலைகொண்டுள்ளன. அவற்றில் 750-க் கும் மேற்பட்ட இந்திய ஊழியர்கள் உள்ளனர். ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்தில் சுமார் 23,000 இந்திய ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுடன் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஓமன் நாட்டின் சோஹர் மாகாணத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழந்தனர். 10 இந்தியர்கள் காயமடைந்தனர் என்று வளைகுடா நாடுகளுக்கான இந்திய வெளியுறவுத் துறை இணைச் செயலர் அசிம் ஆர்.மகாஜன் கூறினார். ஓமன் மீதான ட்ரோன் தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. எனினும், ஈரான்தான் தாக்குதலில் ஈடுபட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்தன.
பிஹாரை சேர்ந்த தேவநாதன் பிரசாத் சிங் (50), அமெரிக்க எண்ணெய் கப்பலில் இன்ஜினீயராக பணியாற்றி வந்தார். ட்ரோன் படகு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் பணியாற்றிய கப்பல் தீப்பிடித்தது. 15 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பலத்த தீக்காயம் அடைந்த தேவநாதன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.