

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றிய பிரதமர் நரேந்திர மோடி. (அடுத்த படம்) தமிழகத்தில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.
புதுடெல்லி/சென்னை: நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும் சென்னை கோட்டையில் முதல்வர் விஜய்யும் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், டெல்லி செங்கோட்டையில் தொடர்ந்து 13-வது ஆண்டாகப் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். நாட்டின் 80-வது சுதந்திர தினம், வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. செங்கோட்டையில் கொடியேற்றிய பிறகு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய மகாத்மா காந்தி மற்றும் அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். சுதந்திரத்துக்குப் பிறகு செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து, ‘வந்தே மாதரம்’ பாடல் எதிரொலிக்கும் தருணம் இது. புதிய தீர்மானங்களை ஏற்றுக் கொண்டு தேசம் உற்சாகத்துடனும் ஆர்வமுடனும் முன்னேறி வருகிறது.
வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற பெரிய கனவை இந்தியா கொண்டுள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, வளர்ந்த நாடாக மாறத் தீர்மானிக்கும் போது துணிச்சலின் அடையாளமாக அமைகிறது.
கடந்த 12 ஆண்டுகளில் பாதுகாப்புத்துறை உற்பத்தி 4 மடங்கும், கதர் மற்றும் கிராமத் தொழில் துறை உற்பத்தி 5 மடங்கும், மின்னணு சாதன உற்பத்தி 7 மடங்கும் அதிகரித்துள்ளன. அலைபேசி உற்பத்தி 33 சதவீதமும், டிஜிட்டல் பரிவர்த்தனை 100 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளன.
சிறிய கனவுகள் இனி நமக்குப் போதாது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும். ஒரு காலத்தில் பொருளாதாரத்தில் பலவீனமான 5 நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்ட இந்தியா, இன்று உலகின் மிக வேகமான வளரும் முக்கிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.
நவீன உள்கட்டமைப்பை உருவாக்க மெட்ரோ ரயில் வலைப்பின்னல்களை விரிவுபடுத்தினோம். பொதுப் போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்தினோம். இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட வேகம் மற்றும் அளவு ஆகியவை சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக காணப்பட்ட ஒரு மாற்றத்தை பிரதிபலிக்கின்றன. இவை அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளுக்குள் நிகழ்ந்தவை.
இந்தியா இனி மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கக் கூடாது. நாம் சுயசார்பு கொண்டவர்களாக மாற வேண்டும் என்பதே எங்கள் உறுதியான நம்பிக்கையாக உள்ளது.
வளர்ந்த நாடு உருவாக வேண்டும் என்றால் நமது நாட்டு இளைஞர்களுக்குப்போதிய பயிற்சி வழங்கப்பட வேண்டும். ஒரு கோடி இளைஞர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு பயிற்சி (ஏஐ) வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்குத் தயாராக இலவச ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும்.
கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள 5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் உள்ள விளையாட்டுத் திறன்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதற்காக, நாடு தழுவிய அளவிலான விளையாட்டுத் திறன் தேடல் திட்டம் தொடங்கப்படும். இதன் மூலம் இளம் வயதிலேயே அவர்களது விளையாட்டுத் திறன்களைக் கண்டறிவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
‘சப்த தாரா’ - சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி 7 அம்சங்களை வரையறுத்தார். அவற்றை அவர் ‘சப்த தாரா’ என்று அழைத்தார். முதல் அம்சமாக உற்பத்தித் துறையும், 2-வது அம்சமாக விவசாயத் துறை மேம்பாடும், 3-வது அம்சமாகத் தரவு மையங்கள், ரோபோட்டிக்ஸ் போன்ற தொழில்நுட்பம், புத்தாக்கம், யுபிஐ ஆகியவையும், 4-வது அம்சமாகக் கதி சக்தி எனப்படும் நாட்டை அனைத்துப் பகுதிகளில் இருந்து இணைக்கும் திட்டங்களையும், 5-வது பாதுகாப்புத் துறையில் தற்சார்பையும், 6-வது அம்சமாகப் பசுமை மற்றும் நீலப் பொருளாதார வளர்ச்சியையும், 7-வது அம்சமாக யோகா, கைவினைப் பொருட்கள், திரைப்படங்கள், அனிமேஷன், கேமிங், டிஜிட்டல் உள்ளடக்கம், படைப்பாற்றல் உலகம் ஆகியவை அடங்கிய ‘மென் சக்தி’ திட்டங்களையும் ‘சப்த தாரா’ என்று பிரதமர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
தமிழகத்தில்... தமிழகத் தலைநகர் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக் கம்பத்தில், முதல்வராக விஜய் முதல் முறையாக தேசியக் கொடியேற்றி வைத்தார்.
காலை 8.33 மணிக்கு கோட்டை வந்தடைந்த முதல்வர் விஜய்யை, தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வரவேற்றார். அதன்பின்னர், தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர் லெப்டின்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் உபல் குண்டு, ஏர் கமோடர் தபன் சர்மா, கடலோரக் காவல் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் யோகிந்தர் தாகா, தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் டிஜிபி டி.எஸ்.அன்பு, சென்னை காவல் ஆணையர் அ.அமல்ராஜ் ஆகியோரைத் தலைமைச் செயலர் சாய்குமார் முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து தமிழக மற்றும் கேரள காவல் துறையினர் நடத்திய அணிவகுப்பு மரியாதையைத் திறந்த ஜீப்பில் அவர் பார்வையிட்டார். அதன்பிறகு 8.45 மணிக்குக் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் விஜய் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.