

மோகன் பாகவத்
நியூயார்க்: இந்து ராஷ்டிரம் என்பது முஸ்லிம்களைத் தவிர்த்தது அல்ல என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்று நினைப்பவர் யாராக இருந்தாலும் அவர் இந்துவாகவே இருக்க முடியாது என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற 'ஒரே உலகம், ஒரே மனிதநேயம்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மோகன் பாகவத், 2018-ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்து ராஷ்டிர கொள்கை குறித்து முஸ்லிம் சமூகத்தினர் கேட்ட கேள்விகளை நினைவு கூர்ந்தார்.
அப்போது அவர் பேசுகையில், "பாரதத்தில் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்று எந்தவொரு இந்துவாவது நினைத்தால், அவர் நிச்சயமாக ஒரு இந்துவாகவே இருக்க முடியாது. உங்களை ஒரு இந்து என்று நீங்கள் அழைத்துக்கொள்ள விரும்பினால், அனைத்துப் பாதைகளும் ஒரே இறைவனையே சென்றடைகின்றன என்பதை நீங்கள் முழுமையாக நம்ப வேண்டும்.
மதச் சடங்குகளில் வேறுபாடுகள் இருந்தாலும், மனிதநேயம் ஒன்றே என்பதைத்தான் இந்தியக் கலாச்சாரம் நமக்குக் கற்பிக்கிறது. வெவ்வேறு மத நடைமுறைகள் இறுதியில் ஒரே உண்மையையும் இறைத் தன்மையையுமே அடைகின்றன" என்று குறிப்பிட்டார்.
மேலும் தொடர்ந்து உரையாற்றிய அவர், "நமது அரசியல் தற்போது சுயநலம் சார்ந்த ஒரு விளையாட்டாக மாறிவிட்டது. 'நான்' மற்றும் 'எனது' என்ற சுயநலம் இருக்கும் இடத்தில் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இயற்கையின் உண்மையான தத்துவம். பாரதம் வரலாற்று ரீதியாகவே அனைத்து மதத்தினருக்கும் புகலிடம் அளித்து இணைந்து வாழும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.
அதேவேளையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த அமெரிக்கப் பயணத்துக்கு சில மனித உரிமை அமைப்புகளும், நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானியும் எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.