

அமராவதி: நாட்டிலேயே முதன் முறையாக தேசிய குவான்டம் கம்ப்யூட்டர் மைய கட்டிடத்திற்கு நேற்று அமராவதியில் மத்திய அமைச்சர் ஜிதேந்தர சிங் அடிக்கல் நாட்டினார். இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.
ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் நேற்று மாலை ‘அமராவதி குவான்டம் வாலி’ மைய கட்டிடத்திற்க்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூட்டாக அடிக்கல் நாட்டினர்.
அப்போது சந்திரபாபு நாயுடு பேசுகையில், நாட்டின் தொழில்நுட்ப எதிர்காலத்திற்கு ஒரு புதிய அத்தியாத்தை தொடங்கி வைக்கும் விதமாக தற்போது அமராவதி குவான்டம் வாலியின் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
50 ஏக்கர் நிலத்தில்... - உலக குவான்டம் தொழில்நுட்பத்திற்கு ஆந்திராவை முன்னிலை படுத்தும் நிகழ்வாக இது உள்ளது. இதன் மூலம் தேசிய குவான்டம் புரட்சிக்கு ஆந்திர மாநிலம் பிள்ளையார் சுழி போட்டுள்ளது. இதற்காக ஆந்திர அரசு அமராவதி தூளூரு பகுதியில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. நாட்டின் முதல் 133 க்யூபிட் குவான்டம் கம்ப்யூட்டரை அமராவதிக்கு கொண்டு வர ஐபிஎம், டிசிஎஸ், எல் அண்ட் டி போன்ற நிறுவனங்கள் முக்கிய நிறுவனங்களாக உள்ளன.
குவான்டம் கம்ப்யூட்டிங், குவான்டம் தகவல் தொழில்நுட்பம், குவான்டம் சென்சார், ஏஐ தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி, ராணுவம், மருத்துவம், கல்வி, நிதித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் பரிசோதனைகள், தொடக்கங்கள், வளர்ச்சி பணி திட்ட பரிசோதனைகள் இனி இங்கு நடக்கும்.
குவான்டம் வாலி அமைவதன் மூலம் உலகளாவிய பரிசோதனை மையங்கள், க்ளோபல் தொழில்நுட்ப முதலீடுகள், ஸ்டார்ட் அப் எக்கோ சிஸ்டம் விரிவாக்கம், பல லட்சம் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்ச்சிகள், வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வரும் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் குவான்டம் மைய கட்டிட பணிகள் நிறைவடையும்.
டிசம்பருக்குள்… - டிசம்பர் மாத இறுதிக்குள் குவான்டம் கம்ப்யூட்டரை இங்கு நிறுவ வேண்டும் என ஆந்திர அரசு லட்சியமாக கொண்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள போஸ்டன், சிங்கப்பூர், ஷாங்காய் நகரங்களுக்கு ஈடாக இனி இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் குவான்டம் வாலி இயங்கும் என்பதில் பெருமை கொள்கிறேன் என சந்திரபாபு நாயுடு பேசினார்.