

ஆதிஷி
புதுடெல்லி: சீக்கிய மதகுரு பற்றி டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி கூறியது உண்மை என தடயவியல் சோதனை அறிக்கையில் தெரியவந்து உள்ளது.
டெல்லி சட்டப்பேரவையில் கடந்த 6-ம் தேதி பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி, சீக்கிய மத குரு பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது. அந்த வீடியோ ஒரிஜினல் அல்ல, மாற்றம் செய்யப்பட்டவை. இதை சமூக ஊடகத்தில் வெளியிட்ட அமைச்சர் கபில் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கூறியது.
இதையடுத்து இந்த வீடியோவை தடயவியல் சோதனைக்கு அனுப்ப டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் விஜேந்தர் குப்தா உத்தரவிட்டார். இதன் அறிக்கை நேற்று வெளியானது. இதுகுறித்து சபாநாயகர் விஜேந்தர் குப்தா நேற்று கூறியதாவது:
ஆம் ஆத்மி கோரிக்கையை ஏற்று, எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி பேசிய வீடியோவை தடயவியல் சோதனைக்கு கடந்த 8-ம் தேதி அனுப்பினேன். சீக்கிய குருக்கள் குறித்து ஆதிஷி கூறிய அவதூறு கருத்துக்கள் ஒரிஜினல் எனவும் அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு, தடயவியல் சோதனையை அவசர கதியில் நடத்தி எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரப்படும். இந்த அறிக்கை பஞ்சாப் அதிகாரிகளை தவறாக பயன்படுத்தி ஆம் ஆத்மி சதியில் ஈடுபட்டுள்ளதை காட்டுகிறது. இந்த விவகாரத்தில் ஆதிஷி மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த அறிக்கையை நிராகரித்துள்ள ஆம் ஆத்மி டெல்லி தலைவர் சவுரப் பரத்வாஜ், “போலி வீடியோவை பயன்படுத்தி மத மோதலை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. இதனால் பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.