சிஜேபி-யின் செப்.5 பேரணிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சிஜேபி போராட்டம் | கோப்புப் படம்

சிஜேபி போராட்டம் | கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) செப்.5-ம் தேதி புதுடெல்லியில் நடத்த உள்ள பேரணிக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக போராட்டக்காரர்கள் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த போராட்டத்தை முடித்துக்கொள்வதற்கு அரசு சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின்படி, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள சிஜேபி, வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தி செப். 5-ம் தேதி பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

சிஜேபியின் இந்த பேரணிக்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி டெல்லியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ராஜேந்திர சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, “அவர்கள் சட்டம் ஒழுங்கை பேணுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எது சட்டவிரோதமானது, எது அனுமதிக்கத்தக்கது என்பதற்கு இணங்க சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு அமலாக்க அமைப்புக்கு உள்ளது. அந்த வரம்புக்குள் அவர்கள் செயல்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அசம்பாவிதம் நடக்கும் என்று முன்கூட்டியே கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு அனைவரும் அமைதியான முறையில் நடந்துகொள்வார்கள் என்று நாங்கள் கருதுகிறோம். அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் என்று நினைப்பதற்கான கட்டாயச் சூழல் எதுவும் தற்போது இல்லை” என தெரிவித்தனர்.

ஒருவேளை நடந்தால் என்ன செய்வது என்ற மனுதாரர் தரப்பு வழக்கறிஞரின் வாதத்துக்கு பதில் அளித்த நீதிபதிகள், “இந்த பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து காவல்துறை அதிகாரிகளே பரிசீலிக்க வேண்டும். எனவே, மனுதாரர் தனது கவலைகளை மத்திய அரசிடமும் காவல்துறையிடமும் தெரிவிக்கலாம்” என தெரிவித்தனர்.

இந்த மனு தொடர்பாக மத்திய அரசுக்கும், டெல்லி காவல்துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை செப்.10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. வழக்கை செப். 5-ம் தேதிக்கு முன்னதாக விசாரிக்க மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், இக்கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்தது.

<div class="paragraphs"><p>சிஜேபி போராட்டம் | கோப்புப் படம்</p></div>
காணாமல் போன உறவுகளைத் தேடி நேபாளம் செல்வோருக்கு உதவ சிறப்புக் குழு: தமிழக அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in