

விஜயவாடா: ஆந்திர வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் நக்சலைட் கமாண்டர் ஹிட்மா உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். ஆந்திராவின் 5 மாவட்டங்களில் வீடு எடுத்து தங்கியிருந்த 31 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர்.
வரும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாட்டில் நக்சல் தீவிரவாதத்தை முற்றிலும் அகற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதனால் சத்தீஸ்கர், ம.பி., தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வனப் பகுதிகளில் இருந்து செயல்படும் நக்சலைட்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
இதனால் வனப்பகுதிகளில் பதுங்கி இருந்த நக்சலைட்கள் அருகில் உள்ள நகர்ப்புறங்களுக்கு ஊடுருவி, தொழிலாளர்கள் என்ற பெயரில் வீடு எடுத்து தங்கத் தொடங்கி உள்ளனர்.
இது குறித்த தகவலின் பேரில் ஆந்திராவில் விஜயவாடா, குண்டூர், ஏலூரு, காக்கிநாடா, விஜயநகரம் ஆகிய 5 மாவட்டங்களில் நேற்று ஒரே நேரத்தில் உளவுத்துறை மற்றும் ஆயுதப்படை போலீஸார் சோதனை நடத்தினர். இதில் 31 நக்சலைட்களை கைது செய்தனர்.
இவர்களில் விஜயவாடா நகரில் மட்டும் 27 பேர் கைது செய்யப்பட்டனர். இங்குள்ள புதிய ஆட்டோ நகரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் 5-வது மாடியில் நக்சலைட்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்குள்ள வீடுகளை ஆயுதப் படையினர் காலி செய்ய வைத்தனர். மேலும் அப்பகுதி கடைகளை மூட வைத்து, அந்த குடியிருப்பு பகுதியை சுற்றி வளைத்தனர். இதையடுத்து 5-வது மாடியில் 3 வீடுகளில் வாடகைக்கு தங்கி இருந்த 12 பெண்கள் உள்ளிட்ட 27 நக்சலைட்களை கைது செய்தனர். இவர்களுடன் தங்கியிருந்த மலேசிய நாட்டை சேர்ந்தவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து ஆந்திர உளவுத்துறை ஏடிஜிபி மஹேஷ் சந்திரா லட்டா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இங்கு மாரேடுமல்லி வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக வந்த ரகசிய தகவலின்படி உளவுத் துறை மற்றும் ஆயுதப்படை போலீஸார் அவர்களை 2 நாட்களாக தேடி வந்தனர்.
செவ்வாய்க்கிழமை காலையில் பாதுகாப்பு படையினர் - நக்சலைட்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 17 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் கமாண்டர் ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தை சேர்ந்த ஹிட்மா பற்றிய தகவலுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கொரில்லா சண்டையில் கைதேர்ந்தவர். கொல்லப்பட்டவர்களில் ராஜி எனும் பெண் மவோயிஸ்டும் அடங்குவார்.
இதுபோல் சத்தீஸ்கர் மாநி லம், எர்ரபோரு வனப்பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் மேலும் ஒரு நக்சலைட் கொல்லப்பட்டார். இதனால் ஒரே நாளில் 7 நக்ச லைட்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.