70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
Updated on
1 min read

புதுடெல்லி: பிஎம் விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தில் இதுவரை 70 லட்சம் பேர் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி பிஎம் விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி தனியார் நிறுவனங்களில் புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.15,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் நிதி வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நாடு முழுவதும் 15 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2,400 கோடி ஊக்கத் தொகையை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தொழில் துறை, தொழிலாளர்கள் இடையே பிஎம் விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டம் பாலமாக செயல்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 70 லட்சம் பேர் வேலைவாய்ப்பினை பெற்று உள்ளனர்.

தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில் ஆர்வமாக பங்கேற்று புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. இன்றைய உலகம், இந்தியா மீது பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. இந்திய இளைஞர்கள் தங்களின் படைப்பாற்றல் மற்றும் திறன்களின் மூலம் உலகத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.

இந்த இலக்கை எட்ட இந்திய இளைஞர்களும் நாட்டு மக்களும் கடினமாக உழைக்க வேண்டும். 6 மாத இடைவெளியில் இரு தவணைகளாக ஊக்கத் தொகை வழங்கப்படும். மேலும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு வேலைவாய்ப்புக்கு ரூ.3,000 என்ற வகையில் மாதந்தோறும் ஊக்கத் தொகை வழங்கப்படும். இந்த தொகை 2 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
பாலியல் புகார்கள் குறித்து விமர்சனம்: அமைச்சருடன் திமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in