

திருச்சூர்: கேரளாவில் மட்டத்தூர் பஞ்சாயத்தை கைப்பற்ற காங்கிரஸ் கவுன்சிலர்கள் 8 பேர், கட்சியில் இருந்து விலகி பாஜகவுடன் கைகோத்தனர்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் மட்டத்தூர் பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் வெளியாயின. மொத்தம் 24 உறுப்பினர்கள் கொண்ட பஞ்சாயத்தில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) 10 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) 8 இடங்களிலும், தே.ஜ கூட்டணி 4 இடங்களிலும், சுயேச்சை 2 இடங்களிலும் வென்றன.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற கே.ஆர். ஓசெப்புக்கு ஆதரவளிக்க ஐக்கிய ஜனநாயக முன்னணி முடிவு செய்திருந்தது. ஆனால் தேர்தலுக்கு முன்பாக ஓசெப் இடது ஜனநாயக முன்னணியுடன் கூட்டு சேர்ந்தார். இது காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனால் கோபம் அடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேரும் தங்கள் கட்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மட்டத்தூர் பஞ்சாயத்தை கைப்பற்ற பாஜக.,வுடன் கூட்டு சேர்ந்தனர். தற்போது பாஜக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியில் போர்க்கொடி தூக்கிய டெய்ஸி ஜோசி புதிய பஞ்சாயத்து தலைவராகியுள்ளார். இவரது தலைமையில் தற்போது புதிய அணி உருவாகியுள்ளது. இதன் மூலம் மட்டத்தூர் பஞ்சாயத்தில் 23 ஆண்டு கால கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்த 8 காங்கிரஸ் கவுன்சிலர்களும், விசுவாசமான தொண்டர்களை, உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கங்கிரஸில் போர்க்கொடி தூக்கியவர் பாஜக ஆதரவுடன் பஞ்சாயத்து தலைவராகி யாரும் எதிர்பாராத புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளார். உட்கட்சி பிரச்சினைகளை தீர்க்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மட்டத்தூர் பஞ்சாயத்தில் ஏற்பட்ட நிலை பிற இடங்களிலும் தொடரும் என திருச்சூர் காங்கிரஸ் தொண்டர்கள் கூறுகின்றனர்.