புதுடெல்லி: தொகுதி மறுவரையறை தொடர்பான எதிர்க்கட்சிகளின் கவலைகளுக்கு எவ்வித தீர்வையும் பிரதமர் மோடி முன்வைக்கவில்லை என்றும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை அவர் நிராகரித்துவிட்டர் என்றும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக மக்களவையில் நடைபற்ற விவாதத்தில் பங்ககேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவரது உரையை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வழக்கத்துக்கு மாறாக பிரதமர் மோடி இன்று மக்களவையில் வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றினார். அதோடு, தனது இயல்புக்கு ஏற்றவாறு, இந்தச் சிறப்பு அமர்வின் மையப் பிரச்சினையான 'தொகுதி மறுவரையறை' (Delimitation) என்பதைத் தவிர்த்து, மற்ற அனைத்துத் தலைப்புகளைப் பற்றியும் அவர் பேசினார். தொகுதி மறுவரையறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கவலைகளை அவர் கவனத்தில் கொள்ளவில்லை.
எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும், இந்த மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும் என பிரதமர் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்க அவரது அரசாங்கம் எதையும் செய்யவில்லை. இப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்ததாகப் பிரதமர் கூறினார். ஆனால், மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் முடிவடைந்த பிறகு (ஏப்ரல் 29) இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த தொடர் கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.
மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்கள் ஆகிய இரு நிலைகளிலும் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக எந்தவொரு மாநில அரசாங்கத்துடனும் முறையாகவோ அல்லது முறைசாராமலோ அரசாங்கம் கலந்தாலோசிக்கவில்லை. தொகுதி மறுவரையறை எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதைச் சட்டத்தில் வெளிப்படையாகக் குறிப்பிடவும் அரசாங்கம் மறுத்துவிட்டது. மாறாக, மக்களவையின் அமைப்பையே மாற்றியமைக்கும் அபாயம் கொண்ட மசோதாக்களை அது அறிமுகப்படுத்தியுள்ளது.
பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட தீவிரமான கவலைகளை வெறும் எளிதாக நிராகரிப்பதன் மூலம், தெற்கு, கிழக்கு, வடகிழக்கு மற்றும் வட இந்தியப் பகுதிகளில் உள்ள பல மாநிலங்களின் அச்சங்களைப் பிரதமர் வேண்டுமென்றே புறக்கணித்துள்ளார். இப்பகுதிகளில் வாழும் மக்களின் நியாயமான கவலைகள், முற்றிலும் உணர்வற்ற முறையில் நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மக்களின் இந்த அவமதிப்புக்கு, இம்மாதம் நடைபெறவுள்ள தேர்தலின் மூலம் அவர்கள் அளிக்கும் வாக்குகளின் வாயிலாக நிச்சயமாகப் பதிலடி கொடுப்பார்கள்.
பெண்களுக்கான இடஒதுக்கீட்டில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் (OBC) சேர்ந்த பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க நாம் வழிவகை செய்ய வேண்டும். எனினும், இந்தப் கோரிக்கையைப் பிரதமர் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள பெண்களிடையே அரசியல் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்பதை பிரதமர் மறைமுகமாக ஒப்புக்கொண்டார். ஆனால், அடித்தள அளவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றதுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தொலைநோக்குப் பார்வையே காரணம் என்பதை அவர் குறிப்பிடத் தவறிவிட்டார்.
பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள அர்ப்பணிப்பு கேள்விக்கு அப்பாற்பட்டது. ஆனால், இன்றைய சூழலில் அதுவல்ல உண்மையான பிரச்சினை. உண்மையான பிரச்சினை இந்தியாவின் அரசியலமைப்புதான். அரசியலமைப்பை பலவீனப்படுத்தி, ஆட்சி அமைப்பின் மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான இந்த இரட்டை வேட முயற்சிக்கு எதிராக, நாளை மாலை 4 மணிக்கு மக்களவையில் மோடி அரசு நிச்சயமாகத் தோல்வியைச் சந்திக்கும். மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது நடைபெற்ற வாக்கெடுப்பு, இதற்கு ஒரு முன்னோட்டமாகவே அமைந்தது” என தெரிவித்துள்ளார்.