

புது டெல்லி: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, தேசிய தலைநகரான டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு இன்று (டிச.14) ‘மிகவும் கடுமையான’ பிரிவில் இருந்ததால், நகரம் அடர்ந்த புகைமூட்டத்துடன் காணப்பட்டது.
டெல்லியின் காஜிப்பூர், ஐடிஓ பகுதி மற்றும் ஆனந்த் விஹார் உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த புகைமூட்டம் காணப்பட்டது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்களின்படி, நகரம் முழுவதும் உள்ள பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து ‘மிகவும் கடுமையான’ நிலையில் பதிவாகியுள்ளது.
பவானாவில் காலை 7 மணிக்கு அதிகபட்சமாக 497 காற்றுத் தரக் குறியீடு ( AQI - ஏக்யூஐ) பதிவாகி, ‘மிகவும் மோசமான’ பிரிவில் இடம்பிடித்தது. நரேலாவில் 492 ஏக்யூஐ-யும், ஓக்லா ஃபேஸ் 2-ல் 474 ஏக்யூஐ-யும் பதிவாகியுள்ளது. என்எஸ்ஐடி துவாரகாவில் மிகக் குறைந்த ஏக்யூஐ-யாக 411 பதிவாகியுள்ளது. ஆனந்த் விஹார் பகுதியில் காற்றின் தரக் குறியீடு 491 எனப் பதிவு செய்துள்ளது.
மேலும், அசோக் விஹார் (493), ஐடிஓ (483), டிடியூ (495) மற்றும் நேரு நகர் (479) போன்ற பகுதிகளிலும் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில் உள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்களின்படி, நஜாஃப்கரில் 408 ஏக்யூஐ-யும், ஷாதிப்பூரில் 411 ஏக்யூஐ-யும் பதிவாகியுள்ளது.
சனிக்கிழமையன்று, காற்றின் தர மேலாண்மை ஆணையம் (CAQM) காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் கடுமையான’ நிலையை நெருங்கியதால், தரநிலை செயல் திட்டத்தின் (GRAP) நான்காம் கட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, டெல்லி அரசின் கல்வி இயக்குநரகம் அனைத்துப் பள்ளிகளையும் ஒன்பதாம் மற்றும் பதினொன்றாம் வகுப்புக்கு கலப்பு முறை (hybrid mode) மூலம் வகுப்புகளை நடத்த உத்தரவிட்டது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்களின்படி, 0 முதல் 500 வரை உள்ள ஏக்யூஐ, ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. காற்றுத் தரக் குறியீட்டின் 0-50 வரையிலான அளவுகள் ‘நல்லது’, 51-100 ‘திருப்திகரமானது’, 101-200 ‘மிதமானது’, 201-300 ‘மோசம்’, 301-400 ‘மிகவும் மோசம்’, மற்றும் 401-500 ‘மிகவும் கடுமையானது’ என வகைப்படுத்தப்படுகின்றன.