

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் குளிர் காலத்தில் காற்று மாசுவின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்பதால் அப்போது கடைபிடிக்க வேண்டிய மாசு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல முக்கிய முடிவுகளை அரசு இப்போதிலிருந்தே எடுத்து வருகிறது.
அந்த வகையில் வருகிற டிசம்பர் 10-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வரை 42 நாட்களுக்கு டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முந்தைய ஆண்டுகளில் குளிர் காலத்தில் படிப்படியான மாசுக்கட்டுப்பாட்டு நடைமுறை அமலில் இருந்தபோதிலும் திரைமறைவில் கட்டுமான பணிகள் நடந்து வந்தன.
எனவே இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். 500 சதுரடிக்கு அதிகமான கட்டுமான தளங்கள் அனைத்தும் டஸ்ட் போர்டல் 2.0 மற்றும் ஏஐ கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். நோட்டீஸ், எச்சரிக்கை, அபராதம் என நடவடிக்கைகள் தொடரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.