

அர்பிதா சர்க்கார் | ஹமீம் மண்டல் |
கொல்கத்தா: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் சீருடையில் ஊடுருவி மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டியிருந்ததாக ஜெய்ஷ்-இ முகமது தீவிரவாதி ஹமீம் மண்டல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டத்தில் வன்முறையும் நடந்தது. இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறும்போது, “சுமார் 2,500-க்கும் மேற்பட்ட ரவுடிகள் பேரணியில் ஊடுருவினர். அவர்களால்தான் மிகப்பெரிய வன்முறை வெடித்தது” என்றனர்.
இந்த சூழலில் மேற்குவங்க மாநிலம், புர்பா பர்தமான் பகுதியில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் ஹமீம் மண்டலை மாநில சிறப்பு அதிரடிப் படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தோழி அர்பிதா சர்க்காரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து மேற்குவங்க சிறப்பு அதிரடிப்படை ஐஜி கவுரவ் சர்மா கூறியதாவது: பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புடன் இணைந்து ஹமீம் மண்டல் செயல்பட்டு உள்ளார். பாகிஸ்தானில் இருந்து அபீர் ஜாட், உமைர், ராணா, ஹமத் ஆகியோர் அவ்வப்போது உத்தரவுகளைப் பிறப்பித்து உள்ளனர். அந்த உத்தரவுகளின்படி ஹமீம் செயல்பட்டு வந்துள்ளார். பிரிட்டன் மற்றும் மெக்ஸிகோவை சேர்ந்த சிம் கார்டுகள் வாயிலாக பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் ஹமீம் தொடர்பில் இருந்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றபோது பாகிஸ்தானில் இருந்து ஹமீமுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. “உடனடியாக போலீஸ் சீருடைகளை வாங்குங்கள். போலீஸ் சீருடையில் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் ஊடுருவி மிகப்பெரிய வன்முறையை ஏற்படுத்துங்கள். இதற்காக ஆண்கள், பெண்கள் என மிகப்பெரிய குழுவை உருவாக்குங்கள்” என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். ஹமீமின் தீவிரவாத பின்னணி தெரிந்தே, அவருக்கு உடந்தையாக அர்பிதா சர்க்கார் செயல்பட்டு உள்ளார். ஹமீமின் உத்தரவின்படி மேற்குவங்கத்தின் பிரபல அரசியல் தலைவர்களை அர்பிதா வேவு பார்த்து உள்ளார். குறிப்பாக முதல்வர் சுவேந்து அதிகாரி குறித்த தகவல்களை திரட்டியுள்ளார்.
மேலும் மேற்கு வங்க அமைச்சர் உமேஷ் ராயின் மகனை காதல் வலையில் வீழ்த்தி அவரை கடத்தவும் முயற்சி செய்து உள்ளார். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுடன் அர்பிதாவும் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு உள்ளார். தற்போது ஹமீம் மற்றும் அர்பிதாவுடன் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளை மிக தீவிரமாக தேடி வருகிறோம். இவ்வாறு ஐஜி கவுரவ் சர்மா தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க போலீஸார் கூறும்போது, “தலைநகர் கொல்கத்தா அருகே ஹவுராவில் ஹமீம் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த வீட்டில் பிரிண்டிங், பார்கோடு பணிகள் நடைபெற்று உள்ளன. கடந்த 10 மாதங்களாக சுமார் 8 பேர் ஷிப்டு அடிப்படையில் பணியாற்றி உள்ளனர். இந்த நிறுவனத்தில் என்ன வகையான பிரிண்டிங் மற்றும் பார்கோடு பணிகள் நடைபெற்றன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.