

புதுடெல்லி: மகா நிக்கோபார் தீவு திட்டத்தின் சுற்றுச்சூழல் அனுமதிகளை மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் அறிக்கையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உடனடியாக வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மக்களவையில், தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா, 2026 விவாதத்துக்கு வரவுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உட்பட நாட்டில் உள்ள 16 பகுதி-நீதிமன்ற அமைப்புகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய மசோதாவாக இது இருக்கும்.
கடந்த 2021-ம் ஆண்டின் தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டத்தின் முக்கியப் பிரிவுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. தீர்ப்பாயங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க சுதந்திரமான தேசிய தீர்ப்பாயங்கள் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் புதிய மசோதாவைக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்துக்கு மத்திய அரசு தற்போது தள்ளப்பட்டுள்ளது.
மோடி அரசு தனது தவறான கொள்கைகளை நியாயப்படுத்த முயன்று தோற்று, தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பணிந்து இந்தச் சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறது. தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்ட பசுமைத் தீர்ப்பாயம், புதிய சட்டத்தின் மூலம் மீண்டும் தனது சட்டப்பூர்வ அதிகாரத்தை மீட்டெடுக்கும் என்று நம்புகிறோம்.
அதன் முதற்கட்டமாக, மகா நிக்கோபார் தீவு திட்டத்தின் சுற்றுச்சூழல் அனுமதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, கடந்த 2025 ஜூலை 8-ம் தேதி சீல் வைக்கப்பட்ட உறையில் பசுமைத் தீர்ப்பாயத்திடம் சமர்ப்பித்த அறிக்கையை உடனடியாகப் பொதுவெளியில் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.