

பிரதமர் மோடி
புதுடெல்லி: ‘‘நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது எம்.பி.க்களை பிரதமர் மோடி அவதூறாகப் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று காங்கிரஸ் சார்பில் மக்களவை சபாநாயகரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 17-ம் தேதி மக்களவையில் அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா, 2026 தோற்கடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 18-ம் தேதி பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த 29 நிமிட உரையில், மசோதாவைத் தடுத்ததாகக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்களைப் பிரதமர் விமர்சித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி, தனது கடமையைச் செய்வதைக் கேள்விக்கு உட்படுத்துவது தனிப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, அது நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான நேரடி அவமதிப்பாகும். எனவே, இந்த விஷயத்தை மிகுந்த தீவிரத்துடன் அணுக வேண்டும். எனவே, எம்.பி.க்கள் மீது அவதூறு சுமத்தியதற்காக, பிரதமர் மோடி மீது மக்களவை விதி 222-ன் கீழ் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்குகிறேன்.
நாடாளுமன்றத்தின் புனிதம் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு பாதுகாப்புகளை நிலைநிறுத்த, சபாநாயகர் ஆகிய நீங்கள் இந்த விவகாரத்தில் உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுபோன்ற விதிமீறல்கள் புறக்கணிக்கப்படவோ அல்லது மீண்டும் நிகழவோ கூடாது. இவ்வாறு கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் கருத்து: இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.பதவியில் இருக்கும் பிரதமரின் நாட்டு மக்களுக்கான உரை எப்போதும் தேசியஒற்றுமை மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு மேடையாகவே இருந்து வந்துள்ளது.
ஆனால், இந்த உரையின்போது பிரதமரின் வெட்கமற்ற கட்சி சார்பு பேச்சு — காங்கிரஸ் கட்சியின் மீது 59 முறை நடத்தப்பட்ட தாக்குதல்கள் — பிரதமராக அவரது வரலாற்றில் மற்றொரு நிரந்தர கறையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.