

சத்ரபதி சம்பாஜி நகர்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே நேற்று கூறியதாவது: மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் சிஜேபியின் முதல் மையக் குழு கூட்டம் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும்.
இதில் பங்கேற்குமாறு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் எங்களுடைய அடுத்தகட்ட செயல்திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும்.
குறிப்பாக எங்கள் அமைப்பை எவ்வாறு விரிவு படுத்துவது, மக்களின் நலனுக்காக நாம் எடுக்க வேண்டிய பிரச்சினைகளைக் கண்டறிவது மற்றும் இயக்கத்துக்கான வரைபடத்தை உருவாக்குவது குறித்து விவாதிப்போம்.
இந்த அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றும் எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை. இது ஒரு மக்கள் இயக்கமாகவே தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சிஜேபி-ஐ அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.