

புதுடெல்லி: 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வீடுகள் கணக்கெடுப்பும், 2027 மார்ச் மாதம் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடைபெறும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதில்:
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்தவுள்ளது. இது இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதலாவதாக வீடுகள் கணக்கெடுப்பும், 2-வதாக மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடைபெறும்.
2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் வசதிக்கு ஏற்ப 30 நாட்களுக்குள் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இது முதல் கட்ட கணக்கெடுப்பு ஆகும். இரண்டாம் கட்டமாக 2027 மார்ச் 1-ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும்.
லடாக் யூனியன் பிரதேசத்தின் மட்டும் 2027-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். அப்போது அங்கு பனிப்பொழிவு காலம் என்பதால் அங்கு கணக்கெடுப்பு பணி நடைபெறாது. 2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதி கணக்கெடுப்பும் நடத்தப்படும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வசதியாக கடந்த நவம்பர் 30-ம் தேதி வரை சோதனை முறையில் கணக்கெடுப்பு சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் நடைபெற்றது. இதுதொடர்பாக வினாத்தாள் விரைவில் வெளியிடப்படும். இதில் எழுந்துள்ள சந்தேகங்கள் தொடர்பான
வினாக்கள், இந்த வினாத்தாளில் இடம்பெறும். இவ்வாறு மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.