

புதுடெல்லி: இளைஞர்கள் ‘நட்பு தினத்தை’க் கொண்டாடியது போல, நாட்டின் பாரம்பரியத்தையும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் போற்றும் வகையில் ‘கைத்தறி தினத்தையும்’ அதே உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான 1905-ம் ஆண்டின் சுதேசி இயக்கத்தை நினைவு கூரும் வகையிலும், ‘தற்சார்பு இந்தியா’ கனவை நனவாக்கும் நோக்கிலும் ஆகஸ்ட் 7-ம் தேதி ‘தேசிய கைத்தறி தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் வீடியோவைப் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, இளைஞர்கள் ‘நட்பு தினத்தை’க் கொண்டாடியது போல, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் போற்றும் வகையில் கைத்தறி நாளையும் உற்சாகமாகக் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
செழுமையான பாரம்பரியம்
தொடர்ந்து நேற்று ‘எக்ஸ்’ தளத்தில் வாழ்த்துப் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “தேசிய கைத்தறி தினமான இன்று, இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தையும், அதைப் பாதுகாத்து வரும் நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் திறமையையும் அர்ப்பணிப்பையும் போற்றி வணங்குகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.